×

ஒன்றிய பாஜக அரசின் பாரபட்ச நடவடிக்கை தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சரக்கு போக்குவரத்திற்காக உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய 9 மாநிலங்கள் வழியாக 3381 கி.மீ. தனி சரக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை 2014ல் ஆட்சிக்கு வந்ததும் ஒன்றிய பாஜ அரசு தொடங்கியது. அதில், நிறைவு பெற்றுள்ள 2079 கி.மீ. தனி ரயில் பாதையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார். பொதுவாக, ஒன்றிய பாஜ ஆட்சி அமைந்தது முதற் கொண்டு ரயில்வே திட்டங்களில் வடமாநிலங்களில் குறிப்பாக குஜராத் மாநிலத்திற்கு காட்டுகிற அக்கறையை தென்மாநிலங்களில் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருக்கிறது.

அந்த குற்றச்சாட்டை நிரூபிக்கிற வகையில் இந்த தனி சரக்கு ரயில் பாதை திட்டம் தொடங்க இருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் சரக்கு ரயில்களுக்கான தனி பாதை அமைக்கும் பிரத்யேக சரக்கு வழித்தடத்திற்கான எந்த ஆய்வோ, நிதி ஒதுக்கீடோ இதுவரை செய்யப்படவில்லை. கடந்த 9 ஆண்டு பாஜ ஆட்சிக் காலத்தில் தென்னக ரயில்வே தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில் பாதை திட்டம் 2006-07ல் தொடங்கப்பட்டு, ரூ.11,400 கோடி நிதி தேவை என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2020ம் ஆண்டில் ரூபாய் 211 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது.

நடப்பு 2023-24ம் ஆண்டில் ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ 15 ஆண்டு காலமாக இத்திட்டம் நிறைவேற்றப்படாமல் முடங்கி கிடக்கிறது. ஒன்றிய பாஜ அரசால் அறிவிக்கப்பட்ட சென்னை-மகாபாலிபுரம்-கடலூர், திண்டிவனம்-செஞ்சி-நகரி, திண்டிவனம்-திருவண்ணாமலை, தூத்துக்குடி-அருப்புக்கோட்டை-மதுரை ஆகிய ரயில் திட்டங்களுக்கு கடந்த 9 ஆண்டுகளாக எந்தவிதமான ஆய்வோ, நிதி ஒதுக்கீடோ செய்யாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இதைவிட ஒரு அநீதியை பாஜ அரசு தமிழகத்திற்கு இழைக்க முடியாது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 சதவிகிதம். இந்தியாவின் மொத்த வரி வருவாயில் 6 சதவீதம் தமிழ்நாட்டில் இருந்து தான் கிடைக்கிறது.

ஆனால், தமிழ்நாட்டிற்கு விநியோகிக்கப்படுவது 1.21 சதவிகிதம் தான். இத்தகைய பாகுபாட்டை, அநீதியை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு பலமுறை கடிதம் மூலமாக தெளிவுபடுத்தியிருக்கிறார். பிரதமர் மோடியை பொறுத்தவரை உத்தரபிரதேசத்திற்கும், குஜராத் மாநிலத்திற்கும் காட்டுகிற அக்கறையை தென் மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டுக்கு காட்டுவதில்லை. இத்தகைய போக்கு நீடிக்குமேயானால் வட மாநிலங்களுக்கு சாதகமாகவும், தென் மாநிலங்களுக்கு பாதகமாகவும் ஒன்றிய பாஜ அரசு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு வலிமை பெற்று தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஒன்றிய பாஜக அரசின் பாரபட்ச நடவடிக்கை தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிக்கும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Union Bajaka government ,K.K. S.S. Anekiri ,Chennai ,Tamil Nadu ,Congress ,K.K. S.S. ,Alakiri ,Uttar Pradesh ,Ariana ,Rajasthan ,Gujarat ,S.S. Anakiri ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!