×

பட்டாகத்தி காட்டி மாணவர்களுக்கு கொலை மிரட்டல்: இரு வாலிபர்கள் கைது

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் தரணிவராகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் மகன் சதீஷ் (20). இவர் திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை கல்லூரி முடிந்ததும் சதீஷ் தனது கிராமத்தைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவனுடன், திருத்தணி பைபாஸ் ரவுண்டானா பகுதியில் மத்தூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறி, வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் மாணவர்கள் இருவரும் படியில் பயணம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது, இந்த பேருந்தின் பின்னால் பைக்கில் வந்த வாலிபர்கள் இருவர் சதீஷ் மற்றும் பள்ளி மாணவனை அவதூரான வார்த்தைகளால் திட்டி உள்ளே செல்லுமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதில், உள்ளே செல்ல இடம் இல்லை என மாணவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், பேருந்து தரணிவராகபுரம் நிறுத்தத்தில் நின்றுள்ளது. சதீஷ் மற்றும் 11ம் வகுப்பு மாணவன் இருவரும் வீட்டிற்கு செல்ல பேருந்தில் இருந்து கீழே இறங்கிய போது, பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் முதலில் அவர்களை அடித்துள்ளனர்.

பின்னர் பைக்கில் வைத்திருந்த பட்டாகத்தியை எடுத்து காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சதீஷின் தந்தை சங்கர் திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவர்களை தாக்கிய முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பூபதி(19), கலாநிதி(19) ஆகிய இருவரையும் அன்றே கைது செய்தனர். அவர்களிடமிருந்த பட்டாகத்தியை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில், கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

The post பட்டாகத்தி காட்டி மாணவர்களுக்கு கொலை மிரட்டல்: இரு வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Pattagathi ,Thiruthani ,Sankar ,Satish ,Thiruvallur District Thiruthani Union Thiranivaragapuram ,Government of Thiruthani ,
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...