×

குளச்சல் கடலில் பலத்த காற்றுடன் மழை: 3வது நாளாக மீன்பிடி தொழில் பாதிப்பு

குளச்சல்: குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம். வள்ளம், கட்டுமரங்கள் அருகில் மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும். இதனால் கட்டுமரங்கள் காலை மீன் பிடிக்க சென்று மதியத்திற்குள் கரை திரும்பிவிடும். மேற்கு கடற்கரை பகுதியில் கடந்த 1ம் தேதி முதல் 60 நாட்கள் விசைப்படகுகளுக்கு மீன் பிடி தடைக்காலம் அமலில் இருந்து வருகிறது. இதனால் கடந்த 36 நாட்களாக விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

வழக்கம் போல் கட்டுமரங்கள் தொழில் செய்து வரும் நிலையில் நேற்று முதல் குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. காற்று காரணமாக பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இவை மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில வள்ளங்களே மீன் பிடிக்க சென்றன. அவற்றுள் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. 3 கட்டுமரங்களில் கொஞ்சம் சூரை, அயரை, வேளா மீன்கள் கிடைத்தது. குறைவாக கிடைத்ததால் இவை வழக்கத்தைவிடவும் கூடுதல் விலைக்கு போனது. குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் வள்ளம், கட்டுமர மீனவர்கள் இன்றும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் இன்று 3 வது நாளாக குளச்சலில் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

The post குளச்சல் கடலில் பலத்த காற்றுடன் மழை: 3வது நாளாக மீன்பிடி தொழில் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags :
× RELATED இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்...