×

திருமணமான 6 மாதத்தில் புழல் ஏரியில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி: போலீசார் விசாரணை

புழல்: புழல் ஏரியில் மூழ்கி புதுமாப்பிள்ளை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை செங்குன்றம் நாரவாரிகுப்பம் சி.கே.மாணிக்கனார் தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார் (27). இவர் சமையல் வேலை மற்றும் வானகங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி. இவர்களுக்கு, கடந்த 6 மாதத்துக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பிரவீன்குமார் புழல் ஏரிக்கு சென்று, மதகு அருகே குளித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்ற அவர், சேற்றில் சிக்கி தண்ணீரில் தத்தளித்தார். இதை பார்த்து அங்கிருந்தவர்கள், அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், முடியவில்லை. பிரவீன்குமார் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த செங்குன்றம் போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து, சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இரவாகிவிட்டதால் திரும்பிச் சென்றனர். மீண்டும் நேற்று அதிகாலை தேடி, ஏரியில் கிடந்த பிரவீன்குமார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

The post திருமணமான 6 மாதத்தில் புழல் ஏரியில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Pudumappilla ,Puzhal lake ,Puzhal ,Chennai ,Sengunram Naravarikuppam ,CK Manikaran ,Dinakaran ,
× RELATED புழல் ஏரியில் நீர் இருப்பு 3 டிஎம்சியாக அதிகரிப்பு