×

‘நமது குப்பை, நமது பொறுப்பு’ திட்டம் பள்ளி மாணவர்களிடையே தலைமை செயலாளர் விழிப்புணர்வு : அடையாறு மண்டலத்தில் ஆய்வு

சென்னை: ‘‘நமது குப்பை, நமது பொறுப்பு’’ திட்டம் மூலமாக குப்பையை தரம் பிரித்து கையாளுவது குறித்து பள்ளி மாணவர்களிடையே தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புற சமுதாய நல மையத்தின் செயல்பாடுகள் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், தெற்கு வட்டார துணை ஆணையர் அமித், மாநகர நல அலுவலர் ஜெகதீசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

நகர்ப்புற சமுதாய நல மையத்தில் புறநோயாளிகள் பிரிவினையும், வருகை பதிவேட்டினையும் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா புறநோயாளிகளுக்கு வழங்கப்படும் பதிவு அட்டைக்கு பதிலாக பதிவுப் புத்தமாக வழங்கிட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். கர்ப்பிணி தாய்மார்களுக்கான பதிவினை நகர்ப்புற சமுதாய நல மையத்தில் பதிவு செய்து அதன் விவரத்தை ஆரம்ப சுகாதார நிலையப் பதிவிற்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், தாய் சேய் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் அங்குள்ள ஆய்வகத்தினை ஆய்வு செய்து, தற்போதுள்ள உபகரணங்களின் எண்ணிக்கை, தேவைப்படும் உபகரணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை சமர்ப்பிக்குமாறும், அதன் பேரில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தை பார்வையிட்டு அத்தியாவசியமான மருந்துகளின் இருப்புகள் குறித்து கேட்டறிந்து, காலாவதியாக உள்ள மருந்துகளை விழிப்புணர்வுடன் கையாளுமாறு மருந்தாளுனருக்கு அறிவுறுத்தினார். மேலும், சுகாதார தகவல் மேலாண்மை அமைப்பினை பார்வையிட்டு நோயாளிகள் பதிவு முறை குறித்தும், மருத்துவமனை கழிப்பறைகளை சுத்தமாக வைத்திடவும், குடிநீர் வசதியை சிறப்புடன் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதை தொடர்ந்து, திருவான்மியூர் பாரதிதாசன் சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியினையும், முதல்வரின் காலை உணவுத் திட்டத்திற்காக கட்டப்பட்டு வரும் சமையல் கூடத்தையும் சிவ் தாஸ் மீனா பார்வையிட்டு, பணியை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதேபோல், பணியாளர்கள் தங்கும் அறையை மாற்றியமைக்கவும், கட்டிடக் கழிவுகள் மற்றும் உடைந்த மேசைகளை அகற்றிடவும் உத்தரவிட்ட அவர், பள்ளி மாணவர்களுக்கு குப்பையை தரம் பிரித்து கையாளுவது குறித்து “நமது குப்பை, நமது பொறுப்பு” என்று விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

* குழந்தைகளுடன் தரையில் அமர்ந்தார்
தமிழ்நாடு அரசின் புதிய தலைமை செயலாளராக பொறுப்பேற்ற சிவ் தாஸ் மீனா அடையாறு மண்டலம், பாரதிதாசன் தெருவில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மையத்தில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வகுப்பறையில் அமர்ந்து இருந்த 3 வயது குழந்தைகளை கண்டு தானும் குழந்தையாகவே மாறி அவர்களுடன் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனாவும் கலந்துரையாடியது அங்குள்ள அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியது.

The post ‘நமது குப்பை, நமது பொறுப்பு’ திட்டம் பள்ளி மாணவர்களிடையே தலைமை செயலாளர் விழிப்புணர்வு : அடையாறு மண்டலத்தில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Adyar ,Chennai ,
× RELATED பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...