×

இன்ஜினியரிங் கல்லூரிகள் தன்னாட்சி அதிகாரம் பெற அண்ணா பல்கலையின் தடையில்லா சான்று முக்கியம்: புதிய விதிமுறைகள் அமலானது

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 446 இணைப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கான அங்கீகாரம் வழங்குவது, தன்னாட்சி கல்லூரிகளுக்கான விதிமுறைகளை உருவாக்குவது போன்ற பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் தான் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஜூன் மாதம் 20ம் தேதி அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கு புதிய விதிமுறைகளை அண்ணா பல்கலைக் கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு இருக்கிறது. இன்ஜினியரிங் கல்லூரிகள் தன்னாட்சி அதிகாரம் பெறுவதற்கு அண்ணா பல்கலைக் கழகத்திடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். மேலும் அந்த கல்லூரிகளை கண்காணிக்க விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டு உள்ளன.

மேலும் இதற்கு முன்பு தன்னாட்சி அங்கீகாரம் பெற்றுள்ள கல்லூரிகளில் இளங்கலை முதலாம் ஆண்டு படிப்பில் 60 சதவீதம் மாணவர் சேர்க்கை என்று உள்ளதை தற்போது 70 சதவீதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதைப்போன்று விரிவுரையாளர்களின் சராசரி பணி அனுபவம் 5 ஆண்டுகள் இருக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் 1:20 என்ற அடிப்படையில் இருக்க வேண்டும். தன்னாட்சி அங்கீகாரம் பெறும் கல்லூரிகளில் நிதி, நிர்வாகக் குழு கூட்டப்படவேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. இதனை பின்பற்றாத கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் இந்த விதிமுறைகளில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் 90 கல்லூரிகள் இதுவரை தன்னாட்சி அங்கீகாரம் பெற்றிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

The post இன்ஜினியரிங் கல்லூரிகள் தன்னாட்சி அதிகாரம் பெற அண்ணா பல்கலையின் தடையில்லா சான்று முக்கியம்: புதிய விதிமுறைகள் அமலானது appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai ,Dinakaran ,
× RELATED பி.எப்.நிதி பாக்கி உத்தரவுக்கு எதிராக அண்ணா பல்கலை. மேல்முறையீடு