×

மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை

சென்னை: மேகதாது விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்பட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 39 MPகள் மூலம் மத்திய அரசை வலியுறுத்தி,தமிழ்நாட்டிற்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்து விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், ‘கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அந்த கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்தபடி மேகதாதுவில் அணை கட்ட தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடக மாநில துணை முதலமைச்சர் சிவக்குமார் மத்திய நீர் வழித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடந்த ஜூன் 20ம் தேதி எழுதிய கடிதத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கர்நாடகாவின் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன். மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும் அதிமுகவும் மேகதாது விவகாரத்தில் இதுவரை நிரந்தர தீர்வு காணவில்லை. மேகதாதுவில் அணை கட்டும் முடிவை கைவிட வேண்டும் என்று கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியிடம் திமுக வலியுறுத்த வேண்டும்.

பெங்களூரில் நடைபெற உள்ள எதிர்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களை, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து மேகதாது விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். மேகதாது விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்படும் வகையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 39 எம்பிக்கள் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழ்நாட்டிற்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களையும் நேரில் சந்தித்து, இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.

The post மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: விஜயகாந்த் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Vijayakanth ,Chennai ,Water Resources Minister ,Duraymurugan ,Union Government ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...