×

ஓரினச்சேர்க்கையாளர் ஆப் மூலம் பழகி இன்ஜினியரிடம் நகை பறிப்பு: 4 பேர் கைது

கோவை: கோவையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் ஆப் மூலம் பழகி, இன்ஜினியரிடம் நகை பறித்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் 28 வயது வாலிபர். இவர் கோவை சரவணம்பட்டியில் தங்கி ஒரு கட்டுமான நிறுவனத்தில் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு ஓரினச்சேர்க்கையாளர்கள் பழகும் செல்போன் ஆப் மூலம் கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த சூர்யா (23) என்பவரின் அறிமுகம் ஏற்பட்டது. இவர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு அடிக்கடி பேசி வந்தனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு தென்காசி வாலிபர் சூர்யாவை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘‘நான் உன்னை நேரில் பார்க்க வேண்டும்’’ என முகவரி கேட்டுள்ளார். அதன்படி, சூர்யாவும் தான் தங்கியிருக்கும் இடத்தை கூறினார். இதைத்தொடர்ந்து தென்காசி வாலிபர் சூர்யாவை பார்க்க சரவணம்பட்டி மருதம் நகர், இ.பி. காலனிக்கு சென்றார். அங்கு சூர்யாவுடன் மேலும் 3 பேர் இருந்தனர். அவர்கள் வாலிபரை மிரட்டி அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயினை பறித்தனர். பின்னர் அவரது செல்போனை பிடுங்கி ‘கூகுள் பே’ மூலமாக தங்களது வங்கிக்கணக்கிற்கு ரூ.7,800 ஐ அனுப்பினர்.

அதன்பிறகு அவரை அங்கிருந்து விரட்டி விட்டனர். வாலிபர் அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், வாலிபரை மிரட்டி நகை, பணம் பறித்தது கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த காட்வின் (24), சஞ்சய் வர்கீஸ் (23), மனோவா (23) மற்றும் சூர்யா (23) என்பதும், சரவணம்பட்டியில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்ததும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

The post ஓரினச்சேர்க்கையாளர் ஆப் மூலம் பழகி இன்ஜினியரிடம் நகை பறிப்பு: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Govai ,Tenkasi District ,Flush ,Dinakaran ,
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...