×

சென்னையில் பரபரப்பு சம்பவம் 2 சிறுமிகள், இளம்பெண் கூட்டு பலாத்காரம்: 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் போக்சோவில் கைது

சென்னை, ஜூலை 2: சென்னை புளியந்தோப்பில் 2 சிறுமிகள் மற்றும் ஒரு இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் போக்சோவில் கைதாகியுள்ளனர். சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சேகர் – சுதா தம்பதியர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். தாம்பரம் பகுதியில் 18 வயதுடைய இவர்களது உறவுக்காரப் பெண் உள்ளார். இவர் தனது 17 வயது தோழியை அழைத்துக் கொண்டு, புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் உள்ள தனது சித்தி சுதாவின் வீட்டிற்கு 28ம் தேதி வந்துள்ளார்.

இதனையடுத்து சித்தியின் மகள் உள்பட 3 பேரும் அடிக்கடி வெளியே சென்று வந்துள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் இரவும் 3 பேரும் வெளியே சென்றுள்ளனர். அப்போது 2 சிறுமிகளும் 11 மணிக்கு வீட்டுக்கு வந்து விட்டனர். சிறுமியின் உறவுக்கார பெண் மட்டும் வரவில்லை. நள்ளிரவு 2 மணியளவில் அந்தப் பெண் நடக்க முடியாமல் மிகவும் சோர்வாக வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த அவரது சித்தி, சித்தப்பா இவ்வளவு நேரம் எங்கு சென்றிருந்தாய் எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, 5 பேர் கொண்ட கும்பல் தன்னை கூட்டு பலாத்காரம் செய்து விட்டதாகவும், இதனால் உடல் முழுவதும் வலி ஏற்பட்டுள்ளதாகவும் கூறி அந்தப் பெண் கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் சித்தி, சித்தப்பா இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து இரவுப் பணியில் இருந்த புளியந்தோப்பு சரக உதவி ஆய்வாளர் ஸ்டீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடந்தது குறித்து விசாரித்தனர். பின்னர் அவரை ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது இரவு ரோந்துப் பணியில் இருந்த புளியந்தோப்பு சரக துணை கமிஷனர் ஈஸ்வரன் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று மற்ற 2 சிறுமிகளிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார். மேலும் மருத்துவமனைக்குச் சென்று பெண்ணிடமும் விசாரணை நடத்தினார்.

அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தாம்பரத்தைச் சேர்ந்த 18 வயது பெண் மற்றும் 17 வயது சிறுமி என இருவரும் கன்னிகாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளனர். தினமும் 3 பேரும் சேர்ந்து வெளியே சென்று ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 சிறுமிகள் மற்றும் 18 வயது இளம்பெண் என 3 பேரும் வெளியே சென்றுள்ளனர். அப்போது கன்னிகாபுரம், வெங்கடேசபுரம் பழைய காலனி பகுதியில் 3 பேரிடமும் புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சேர்ந்த ஆண் நண்பர்கள் கூட்டாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பயந்துபோன 2 சிறுமிகள் வீட்டிற்கு வந்து விட்டனர். ஆனால் தாம்பரத்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணை அங்கிருந்து நகரவிடாமல், 5 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அதன் பிறகு அந்தப் பெண்ணை கன்னிகாபுரம் வரை பைக்கில் அழைத்து வந்து விட்டுச் சென்று விட்டனர். அதன் பிறகு பாதிக்கப்பட்ட பெண் நடக்க முடியாமல் வீட்டிற்கு வந்து தனக்கு நேர்ந்த கொடுமையை தனது சித்தி, சித்தப்பாவிடம் கூறியுள்ளார். இதனையடுத்து புளியந்தோப்பு போலீசார் நேற்று காலை இந்த வழக்கில் புளியந்தோப்பு கன்னிகாபுரம் தாஸ் நகர் முதல் தெருவைச் சேர்ந்த பாஸ்கர் (22), தனுஷ் (19), சஞ்சய் (21), லாமிக் (18), மகேஸ்வரன் (18), தனுஷ் என்ற அன்னை தனுஷ் (19), முத்துராமன் (21), சஞ்சய் என்ற மொட்டையன் (18) மற்றும் 17 வயது சிறுவர்கள் 3 பேர் என மொத்தம் 11 பேரை கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கார்த்திக் என்ற விஷால் (22) என்பவரை தேடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள். கன்னிகாபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் சில ஆண் நண்பர்கள் தொடர்பு வைத்திருந்தனர். அந்த சிறுமியின் வீட்டிற்கு 2 பெண் தோழிகள் வந்துள்ளனர் என்பதை அறிந்துகொண்டு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு மது வாங்கிக் கொடுத்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த 2 சிறுமிகள் விரைவாக வீட்டிற்குச் சென்று விட்டனர். குறிப்பிட்ட 18 வயது பெண் மட்டும் 2 பேரிடம் மாட்டிக்கொள்ள, அவர்கள் போன் செய்து மேலும் சிலரை அங்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 11 பேர் மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், 11 பேரையும் கைது செய்தனர். இதில் 8 பேரை புழல் சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் 3 பேரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். 17 வயது சிறுமி தவறான ஆண் நண்பர்களுடன் பழக்கம் வைத்துக் கொண்டு, தனது வீட்டிற்கு வந்த 2 தோழிகளையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தியதால் 3 பேரும் பாலியல் வன்கொடுமையில் சிக்கிய இந்த சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னையில் பரபரப்பு சம்பவம் 2 சிறுமிகள், இளம்பெண் கூட்டு பலாத்காரம்: 3 சிறுவர்கள் உள்பட 11 பேர் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Sensational incident ,Chennai ,Chennai, ,Pulyanthop, Chennai ,POCSO ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...