×

தேசிய மருத்துவர்கள் தினம் தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தேசிய மருத்துவர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் மருத்துவரும், மேற்கு வங்கத்தின் முதலமைச்சருமான டாக்டர் பிதான் சந்திர ராயின் நினைவாக ஜூலை 1ம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய மருத்துவர்கள் தினத்தையடுத்து பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: உயிர் கொடுத்த பெற்றோர் தெய்வங்கள் என்றால், உயிர் காக்கும் மருத்துவர்களும் தெய்வங்கள் தான். அத்தகைய போற்றத்தக்க பணிசெய்யும் மருத்துவர்கள் அனைவருக்கும் தேசியமருத்துவர்தினம் நல்வாழ்த்துகள். அல்லும் பகலும் மக்களுக்காக தன்னலம் கருதாமல் மகத்தான மருத்துவ சேவையாற்றும் அனைத்து மருத்துவர்களின் தியாகத்தை இந்நாளில் போற்றி வணங்குகிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அனைத்து மருத்துவர்களுக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாளில், அரசு மருத்துவர்களின் பதவி உயர்வு, ஊதிய உயர்வு குறித்த அரசாணை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: மக்களைக் காக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் மருத்துவர்களையும், அவர்களின் உணர்வுகளையும் மக்கள் மதிக்க வேண்டும். அவர்கள் மகிழ்ச்சியாக பணி செய்வதை உறுதிப் படுத்த அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். தேசிய மருத்துவர்கள் நாள் கொண்டாடப்படும் நிலையில், சமூகப் பொறுப்புடன் மக்களின் நோய் தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: மனித குலத்துக்கு தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவர்களுக்கு தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வரும் மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: மருத்துவராக பணியைத் தொடங்கி மேற்கு வங்கத்தின் முதல்வராக உயர்ந்த மருத்துவர் ராயின் பிறந்தநாள் தேசிய மருத்துவர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மருத்துவத்துறை வளர்ச்சிக்கு பெரும் பங்களித்தவர் ராய். உடல் மற்றும் மனம் சார்ந்த குறைபாடுகளை மட்டுமின்றி சமூகக் கேடுகளையும் அகற்ற வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. அதை மருத்துவர்களால் சாதிக்க முடியும். தங்களை வருத்திக் கொண்டு மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்து.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: ஆரோக்கியமான சமூகத்தை உறுதி செய்யும் வகையில் 24 மணி நேரமும் ஓய்வின்றி பணியாற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். தொற்றுநோய், தொற்றா வாழ்வியல் நோய், விபத்துகள் என மக்கள் சந்திக்கும் துன்பங்களில் இருந்து புத்துயிருடன் மீட்கும் மருத்துவர்களை மக்கள் தாங்கள் வழிபடும் தெய்வங்களுக்கு இணையாக கருதுகின்றனர்.

* முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தன்னலம் கருதாது உலகத்து உயிர்களின் உடல் நலனும் உள்ள நலனும் காக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் தின வாழ்த்துகள். மருத்துவர்கள் நலனுக்கான அனைத்தையும் கழக அரசு செய்து கொடுக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post தேசிய மருத்துவர்கள் தினம் தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : National Physicians Day ,Chennai ,National Doctors Day ,India ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...