×

அரசு, சுயநிதி கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் மருத்துவ படிப்புக்கான கட்டணம் உயர்வு: 10 ஆண்டுக்கு பிறகு மாற்றியமைத்து அரசு உத்தரவு

சென்னை: அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவ படிப்புக்கான கட்டணங்களை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,175 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோல 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில், 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சென்றுவிடும். தமிழ்நாடு மருத்துவ கல்லூரிகளில் உள்ள மீதி உள்ளவை மாநில அரசுக்கான ஒதுக்கீட்டு இடங்கள். அதேபோல், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 1,960 பிடிஎஸ் இடங்களில் 1,254 இடங்களும் மாநில ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 569 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் செல்கிறது.

தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் எஞ்சியுள்ள இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களாகும். இந்நிலையில் தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கியது. வருகிற 28ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கலந்தாய்வில் கலந்து கொள்ள நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வை நடத்தும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம், 2023-24ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. அதில், இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு இடங்களில் சேருபவர்களுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயித்து அறிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருபவர்கள் ஆண்டு ஒன்றுக்கு ரூ.18 ஆயிரத்து 73, பி.டி.எஸ். படிப்பில் சேருபவர்களுக்கு ரூ.16 ஆயிரத்து 73, இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் சேருவோருக்கு ரூ.1 லட்சமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை அரசு கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க ரூ.13 ஆயிரத்து 610, பி.டி.எஸ். படிக்க ரூ.11 ஆயிரத்து 610 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இதேபோல், தனியார் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் முதல் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில், வேலூர் சிஎம்சி கல்லூரியில் ரூ.53 ஆயிரம் கட்டணமாக உள்ளது. இவர்களுக்கான கட்டணமும் ரூ.90 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

மேலும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வரை தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிக்க ஓராண்டுக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டு ரூ.13 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கும் கடந்த ஆண்டைவிட ரூ.1 லட்சம் அதிகமாக உயர்த்தி, ரூ.24 லட்சத்து 50 ஆயிரமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாணவர்களின் கல்வி நலன் பாதிக்காத வகையில் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தனர். மேலும், கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவப் படிப்புக்கான கல்வி கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் கல்வி நலன் பாதிக்காத வகையில் புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post அரசு, சுயநிதி கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் மருத்துவ படிப்புக்கான கட்டணம் உயர்வு: 10 ஆண்டுக்கு பிறகு மாற்றியமைத்து அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : MPBS ,Govt ,CHENNAI ,Tamil Nadu government ,BDS ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...