*மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம்
ஊட்டி : தென்மேற்கு பருவமழை ஏமாற்றி வரும் நிலையில் அவலாஞ்சி, எமரால்டு அணைகளில் நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. மழை பொய்க்கும் பட்சத்தில் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பார்சன்ஸ்வேலி உள்ளிட்ட பல்வேறு அணைகள் உள்ளன. இந்த அணைகளில் உள்ள நீரை கொண்டு 12 நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணைகளில் இருந்து மின் உற்பத்தி மட்டுமின்றி குடிநீர் உபயோகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. பருவமழை சமயங்களில் இந்த அணைகள் நிரம்பி விடும். இதனால், மின் உற்பத்தி, குடிநீர் தேவைகளுக்கு பாதிப்பு இருக்காது.
இதனிடையே, ஊட்டி அருகே அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகள் உள்ளன. இந்த அணைகளில் உள்ள நீரை கொண்டு குந்தா, கெத்தை, பில்லூர் ஆகிய மின் நிலையங்கள் இயக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு பெய்த மழை காரணமாக அணையில் நீர் இருப்பு இருந்தது. கோடை சீசனின் போது சமயத்தில் மின் உற்பத்திக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வந்த நிலையில், நீர்மட்டம் குறைய துவங்கியது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் துவக்கத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஓரிரு நாட்கள் மட்டுமே மழை பெய்தது. அதுவும் போதுமானதாக இல்லை. அதன்பின், எதிர்பார்த்த அளவிற்கு பெய்யவில்லை.
மற்ற நாட்களில் மேகமூட்டமான காலநிலையே நிலவி வருகிறது. நீர் பிடிப்பு பகுதிகளிலும் போதுமான மழை பெய்யவில்லை. அணைகளில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் எடுக்கப்படுவதால் நீர்மட்டம் குறைந்து வருகிறது. 171 அடி கொள்ளளவு கொண்ட அவலாஞ்சி அணை, 184 அடி கொள்ளளவு கொண்ட எமரால்டு அணைகளில் தற்போது 80 அடிக்கும் குறைவாகவே நீர் உள்ளது. இனிவரும் நாட்களிலும் மழை ஏமாற்றும் பட்சத்தில் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை உள்ளது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post தென்மேற்கு பருவமழை ஏமாற்றி வரும் நிலையில் எமரால்டு, அவலாஞ்சி அணைகளில் நீர்மட்டம் சரிந்தது appeared first on Dinakaran.