×

திருவண்ணாமலையில் நாளை குரு பவுர்ணமி கிரிவலம் பக்தர்கள் தரிசனத்துக்கு விரிவான ஏற்பாடுகள்

*முதன்முறையாக சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் நாளை நடைபெறும் குரு பவுர்ணமி கிரிவலத்திற்கு விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலில் விரைவாக பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் அமைந்திருக்கிறது அண்ணாமலையார் திருக்கோயில். எனவே, மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர்.

அதன்படி, திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் 2ம் தேதி(நாளை) இரவு 7.45 மணிக்கு தொடங்கி, 3ம் தேதி மாலை 5.48 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, வரும் ஞாயிற்றுக் கிழமை இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.மேலும், இந்த பவுர்ணமி குரு பவுர்ணமி என அழைக்கப்படுகிறது. எனவே, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்கள் அதிக அளவில் கிரிவலம் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, இந்த ஆண்டுதான் முதன்முறையாக குரு பவுர்ணமி என பக்தர்களிடம் பெரிதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

எனவே, திருவண்ணாமலையில் குரு பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு தேவையான, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வழக்கத்தைவிட கூடுதலான சிறப்பு பஸ்கள் இயக்கவும், அதிக அளவில் போலீஸ் பாதுகாப்பு போடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ேமலும், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக, தரிசன வரிசையை முறைப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பொது தரிசன வரிசையை ராஜ கோபுரம் வழியாக அனுமதித்து, திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

ேமலும், கட்டண தரிசனத்தை பவுர்ணமி நாளில் ரத்து செய்யவும் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், ஒற்றை தரிசன வரிசையை ஏற்படுத்த பரிசோதனை முயற்சியை இந்த முறை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஆனால், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. அதோடு, இந்த பவுர்ணமியில் இருந்து முதன்முறையாக பவுர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவித்திருக்கிறது. அதன்படி, நாளை(2ம் தேதி) இரவு 9.50 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும்.

அதைத்தொடர்ந்து, நாளை மறுதினம் (3ம் தேதி) அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, காலை 5.35 மணிக்கு வேலூர் கண்ட்டோன்மென்ட் சென்றடையும். அதேபோல், விழுப்புரத்தில் இருந்து நாளை காலை 915 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், திருவண்ணாமலைக்கு காலை 11 மணிக்கு வந்தடையும். அதைத்தொடர்ந்து, பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு, பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். மேலும், விழுப்புரத்தில் நாளை இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும்.
அதைத்தொடர்ந்து, 3ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு காலை 5 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

இந்நிலையில், வேலூர் கண்ட்டோன்மென்ட் செல்லும் சிறப்பு ரயில், அங்கிருந்து தொடர்ச்சியாக சென்னை பீச் ஸ்டேஷன் வரை செல்லவும், விழுப்புரம் வரை செல்லும் சிறப்பு ரயில் அங்கிருந்து சென்னை பீச் ஸ்டேஷன் வரை செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை நேற்று மாலை எஸ்பி கார்த்திகேயன் ஆய்வு செய்தார். அப்போது ஏடிஎஸ்பி பழனி, டிஎஸ்பி குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post திருவண்ணாமலையில் நாளை குரு பவுர்ணமி கிரிவலம் பக்தர்கள் தரிசனத்துக்கு விரிவான ஏற்பாடுகள் appeared first on Dinakaran.

Tags : Guru Bournami Grivalam ,Tiruvannamalaya ,Thiruvannamalai ,Guru Pournami Krivala ,Tiruvannamalai ,Guru Pournami Grivalam ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...