
செங்கம்: விபத்தில் இறந்த இரு சிறுவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி பொதுமக்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரவிந்தன்(17), ரோகன்(17). இவர்கள் இருவரும் கடந்த 19ம்தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஜேசிபி வாகனம் மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்த நிலையில் விபத்தில் இறந்த 2 சிறுவர்களின் குடும்பங்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேட்டு நேற்று காலை 8.30 மணி அளவில் புதுச்சேரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை கொட்டக்குளம் கிராமத்தில் இறந்த சிறுவர்களின் உறவினர்களும், பொதுமக்களும் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் புதுச்சேரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த டிஎஸ்பி தேன்மொழி தலைமையிலான போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் அங்கு அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
The post செங்கம் அருகே விபத்தில் உயிரிழந்த appeared first on Dinakaran.