×

தொழில் வளர்ச்சிக்கு ஒரு இம்மியளவுக்கு கூட மோடி உதவவில்லை ஒன்றிய அரசின் தவறான கொள்கையால் கடும் நெருக்கடியில் பனியன் தொழில்: திருப்பூர் எம்பி சுப்பராயன் குற்றச்சாட்டு

திருப்பூர்: ‘தொழில் வளர்ச்சிக்கு ஒரு இம்மியளவுக்கு கூட பிரதமர் மோடி உதவவே இல்லை. ஒன்றிய அரசின் தவறான கொள்கையால், பனியன் தொழில் கடும் நெருக்கடியில் உள்ளது’ என திருப்பூர் எம்பி சுப்பராயன் குற்றம் சாட்டி உள்ளார். திருப்பூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் திருப்பூர் எம்பி சுப்பராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின் எம்.பி. சுப்பராயன் நிருபர்களிடம் கூறியதாவது: அதிக அளவில் அந்திய செலவாணியை ஒன்றிய அரசுக்கு ஈட்டி தருவதோடு, உள்நாட்டிலும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் துணையாக இருப்பது இந்த பனியன் தொழில். தொடங்கிய காலத்தில் இருந்து, இன்று வரை இதுபோன்ற தேக்க நிலையும், நெருக்கடியும் ஏற்பட்டது இல்லை. தொழில் வளர்ச்சிக்கு ஒரு இம்மியளவுக்கு கூட பிரதமர் மோடி உதவவே இல்லை.

கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் வங்கிகள் மூலம் மிகப்பெரிய அளவில் கடனுதவி அளிப்பது, கட்ட முடியாத கடன்களை ரத்து செய்வது மோடி அரசின் நடவடிக்கை. ஆனால் ஒரு பனியன் கம்பெனிக்கு கூட வரிச்சலுகையோ, கடன் ரத்தோ செய்யவில்லை. பல கம்பெனிகள் கடனில் மூழ்கி போய்விட்டன. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முற்றிலும் அழிந்து அதனுடைய சந்தை வாய்ப்பை பெரிய நிறுவனங்கள் கைப்பற்ற மோடி உதவி செய்கிறார். அதன் தீய விளைவு தான் பனியன் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி.

ஆயத்த ஆடை உற்பத்தி தயாரிப்பு நிறுவனங்கள் இன்றைக்கு நெருக்கடியில் இருப்பதற்கு காரணம் நூல் விலையின் ஏற்ற, இறக்கம். பஞ்சை பதுக்குகிறார்கள். அதை ஒன்றிய அரசு தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது. எனவே, பனியன் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கையை எதிர்த்து போராட ேவண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post தொழில் வளர்ச்சிக்கு ஒரு இம்மியளவுக்கு கூட மோடி உதவவில்லை ஒன்றிய அரசின் தவறான கொள்கையால் கடும் நெருக்கடியில் பனியன் தொழில்: திருப்பூர் எம்பி சுப்பராயன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Modi ,Union government ,Banyan Labour ,Thiruppur ,Subrayan ,Tiruppur ,Banyan ,Dinakaran ,
× RELATED ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின்...