×

தமிழில் குடமுழுக்கு நடத்த கோரிக்கை: தமிழ் தேசிய நிர்வாகியை தாக்கிய பாஜ தலைவர் கைது

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழில் குடமுழுக்கு நடத்த வலியுறுத்தியவர் மீது தாக்குதல் நடத்திய பாஜக தலைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகேயுள்ள குமரன் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தமிழ்தேசிய பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார். ஓசூரில் நேற்று சந்திரசூடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவை, தமிழில் நடத்த வேண்டும் என, தமிழ் தேசிய பேரியக்கம் மற்றும் தெய்வ தமிழ் பேரவை சார்பில், கோயில் செயல் அலுவலர் சாமிதுரையிடம் கோரிக்கை மனு கொடுத்தார். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற்ற பின், தமிழ், சமஸ்கிருத மொழிகளில் பூஜை செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

மேலும் இது தொடர்பாக மாரிமுத்து மற்றும் நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை ஆய்வர் பூவரசன், தெய்வ தமிழ் பேரவை மற்றும் தமிழ் தேசிய பேரியக்கத்தினருக்கு தகவல் தெரிவிக்க, ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலில் உள்ள அலுவலகத்திற்கு வருமாறு நேற்று முன்தினம் மாலை தெரிவித்தனர். இதற்காக மாரிமுத்து, சுப்பிரமணி ஆகியோர் சென்றனர். அங்கு பேச்சுவார்த்தை நடத்திய போது, கும்பாபிஷேகத்தை சமஸ்கிருதத்தில்தான் நடத்த வேண்டும் என கூறி, மாரிமுத்து மற்றும் சுப்பிரமணியை, மர்ம நபர்கள் சிலர் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த மாரிமுத்து, ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், போலீசார் மர்ம நபர்களை தேடி வந்தனர்.

அதேபோல், பூ அலங்காரம் செய்யும், தளி சாலையில் உள்ள லிட்டில் ஹவுஸ் ரெசிடென்சியை சேர்ந்த ரமேஷ், என்பவர், தமிழ் தேசிய பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, நகர செயலாளர் முருகபெருமாள், சுப்பிரமணி ஆகியோர் தன்னை தாக்கியதாக, ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் இரு தரப்பும் கொடுத்த புகாரின் பேரில், மாரிமுத்து, சுப்பிரமணி, ரமேஷ் ஆகிய 3பேர் மீதும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே, மாரிமுத்து மீது தாக்குதல் நடத்தியதாக ஓசூரை சேர்ந்த மஞ்சுநாத் (42), பார்வதி நகரை சேர்ந்த வினோத் (31) ஆகியோரை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இவர்களில் மஞ்சுநாத், கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக ஐடி விங்க் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.

The post தமிழில் குடமுழுக்கு நடத்த கோரிக்கை: தமிழ் தேசிய நிர்வாகியை தாக்கிய பாஜ தலைவர் கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,National ,Hosur ,Kudamuzku ,Hosur, Krishnagiri district ,
× RELATED சிறுமியை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்கள்