பாப்பாக்குடி, ஜூன் 29: பெண்களுக்கு கொடுக்கும் கல்வி ஒட்டுமொத்த சமுதாயத்திற்கானது என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார். நெல்லை மாவட்டம் முக்கூடலில் புதிதாக அமைக்கப்பட்ட பாலகன் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா கல்லூரியின் நிறுவனர் பாலகன் ஆறுமுகச்சாமி தலைமையில் நடந்தது. கல்லூரி அறங்காவலர்கள் கமலா, சவுந்தரராஜன், இந்திரா குமரேசன் வரவேற்றனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில் ‘‘பனை மரமும், தாமிரபரணி ஆறும் தான் எனது துணிச்சலுக்கு காரணம். இந்த மண்ணில் கிடைத்த ஆரம்ப கல்வியும், தாமிரபரணி ஆறும் தான் இரு மாநிலங்களை ஆளும் துணிச்சலை தந்தது. தென்பகுதியில் பெண்களுக்கு இன்னும் அதிகமான வாய்ப்புகள் வழங்க வேண்டும்.
பெண்களுக்கு கொடுக்கும் கல்வி அவருக்கு மட்டுமானது அல்ல ஒட்டுமொத்த இந்த சமுதாயத்திற்கானது. பெண்களுக்கு அதிகம் கல்வியில் வாய்ப்பு கொடுங்கள். பாரதி சொன்னது போல ஞானசெருக்கு வேண்டும். அது கல்வியினால் மட்டுமே சாத்தியமாகும். எனவே பெண்களுக்கு கல்வி கொடுத்தால் அதன் மூலம் கிடைக்கும் பெருமையே செருக்கு தரும்’’ என்றார்.
விழாவில் சேரன்மகாதேவி சப் கலெக்டர் முகமது சபீர் ஆலம், சேரன்மகாதேவி தாசில்தார் விஜயா, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் ஒன்றிய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்பிக்கள் சிவப்பிரகாசம், ராமசுப்பு, ஜெயசீலன், பூவிஜேஷ் மெட்ரிக் பள்ளி நிறுவனர் பூமிபாலகன், தாளாளர் விஜய குமாரி, சதக்கத்துல்லா கல்லூரித் தாளாளர் பத்ஹூர் ரப்பானி, தொழில் வர்த்தக சங்கத்தலைவர் குணசேகரன், எம்ஜிஆர் ஜானகி அம்மாள் மகளிர் கல்லூரி தலைவர் குமார், நெல்லை பெல்பின்ஸ் சேர்மன் குணசிங், தொழிலதிபர் கருணாகரன், பா.ஜ. மாநில செயலாளர் சூர்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கல்லூரி முதல்வர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.
The post பெண்களுக்கு கொடுக்கும் கல்வி சமுதாயத்திற்கானது appeared first on Dinakaran.