×

வேண்டியதை தந்தருளும் வேங்கடாசலபதி

மஹா கும்பாபிஷேகம் 29.6.2023

ஒப்பிலியப்பன் கோயில் திருநாகேஸ்வரம்

என்னப்பனெனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய்
பொன்னப்பன் மணியப்பன் முத்தப் பனென்னப்பனுமாய்
மின்னப்பொன் மதிள் சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தவப்பன்
தன்னொப்பாரில்லப்பன் தந்தனன் தனதாள் நிழலே

நூற்றெட்டு திவ்ய தேசங்களில் புகழ் பெற்றதும், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதுமான இத்திருத்தலம், பூலோக வைகுந்தம், திருவிண்ணகர் என்றெல்லாம் போற்றப்படுகிறது. இத்தலம், திருவேங்கடமென்னும் திருப்பதியைப் போலவே பல்வேறு வகைகளில் பெரியதொரு பிரார்த்தனைத் தலமாய் விளங்கிவருவதும் அனைவரும் அறிந்ததே.

இத்தலத்தில் என்னப்பன், பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், திருவிண்ணகரப்பன் என ஐந்து எம்பெருமான்களாக நம்மாழ்வாருக்கு தரிசனம் தந்த வேங்கடாசலபதிப் பெருமாள், பக்தர்களால் மிகப் பிரியமாய் “ஸ்ரீ ஒப்பிலியப்பன்’’ என்று அழைக்கப்பட்டு, ஒரே தேவியாம் ஸ்ரீபூமிதேவி நாச்சியாருடன் ஒரே சந்நதியில் எழுந்தருளி, வேண்டுபவர்க்கு வேண்டுவதையளித்து அருள்பாலித்துவருகிறார்.

தற்போது, ஒப்பற்ற பெருமையுடன் விளங்கும் இத்திருக்கோயிலின் விமானங்கள், கோபுரங்கள், பிராகாரங்கள், சிறு சந்நதிகள் முதலியன புனரமைத்து திருப்பணி வேலைகள் அனைத்தும் பூர்த்தி அடைந்துள்ளன.

நிகழும் சோபகிருது வருடம் ஆனி மாதம் 14-ஆம் தேதி (29.6.2023) வியாழக்கிழமை ஏகாதசி, சுவாதி நட்சத்திரம் அமிர்த யோகம் கூடிய நன்னாளில், காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் சிம்ம லக்னத்தில், “ஸ்ரீவேங்கடாசலபதி’’ சுவாமிக்கும், “பூமிப்பிராட்டிக்கும்’’, இதர மூர்த்திகளுக்கும் மற்றும் திருக்கோயிலுடன் இணைந்த ஒப்பிலியப்பன் கோயில் வடக்கு வீதியில் எழுந்தருளியிருக்கும் “ஸ்ரீஜெய வீர ஆஞ்சநேயர்’’ திருக்கோயிலுக்கும் திருவிண்ணகரப்பன் திருவருளை முன்னிட்டு, “மஹா கும்பாபிஷேகம்’’ நடைபெறுவதால், பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு, ஸ்ரீபூமிதேவி சமேத ஒப்பிலியப்பனின் அனுக்ரஹத்தைப் பெற வேண்டுகிறோம்.

25.6.2023 முதல் 29.6.2023 வரை 5 நாட்களுக்கு திருக்கோயில் சார்பாக ஸ்ரீபூமிதேவி திருமண மண்டபத்தில் சிறப்பு அன்னதானம் வழங்கப்படும்.

தொகுப்பு: குடந்தை நடேசன்

The post வேண்டியதை தந்தருளும் வேங்கடாசலபதி appeared first on Dinakaran.

Tags : Venkatachalapati ,Oppiliyappan Temple ,Thirunageswaram ,Ennappanenakaikulai ,Ponnappan ,Maniyappan ,Pannappanumai ,
× RELATED கும்பகோணம் அருகே வீட்டுமனை பட்டா வழங்காததால் தேர்தல் புறக்கணிப்பு..!!