×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனக சபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஜூன் 25ம் தேதி தேர் திருவிழாவும், 26ம் தேதி மகா அபிஷேகமும், ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் நடைபெற்றது. கோயிலில் தேர் மற்றும் தரிசன திருவிழாவின் போது கனகசபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள் என்பது தொன்று தொட்டு நடைபெற்று வருவது வழக்கமாகும். ஆனால் இந்த ஆண்டு கடந்த 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என பொது தீட்சிதர்கள் அறிவிப்பு பலகை வைத்தனர்.

இதுதொடர்பான புகார்கள் வந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறையினர் கடந்த 24-ம் தேதி பதாகையை அகற்ற சென்ற போது, தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீட்சிதர்கள் வைத்த அந்த அறிவிப்பு பதாகை அகற்றப்பட்டது. அதனை தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் விதித்த தடையை மீறி, நேற்று இரவு போலீஸ் பாதுகாப்புடன் கனகசபை மீது ஏறி இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது ஆத்திரமடைந்து தீட்சிதர்கள் அதிகாரிகளை நோக்கி கூச்சலிட்டனர்.

இதனால் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் சிதம்பரம் நடராஜர கோவிலில் ஆணித்திருமஞ்சன தரிசன உற்சவம் முடிவுற்று இன்று புதன்கிழமை காலை பால் நிவேத்ய பூஜை முடிவு பெற்று தீட்சிதர்கள் அறிவித்தபடி காலை 7 மணிக்கு கனக சபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து கனக சபை மீது பக்தர்கள் இன்று காலை முதல் ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி appeared first on Dinakaran.

Tags : Sidambaram ,Natarajar ,Temple ,Sami ,Kanakasaba ,Cuddalore ,Chidambaram Natarajar temple ,Chidambaram Natarajar ,Kanakasabha ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...