×

2024ம் ஆண்டு எம்பி தேர்தலுக்கு தமிழ்நாட்டில் 1,78,357 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

சென்னை: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் 1,78,357 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த பயிற்சி வகுப்பு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னை, எழும்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து தேர்தல் அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியர்கள்) பங்கேற்றார்கள். சென்னை மாவட்டத்தில் மட்டும் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களிடம் கூறியதாவது: 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்தும், வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ளது குறித்தும் ஆய்வு செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என பரிசோதிக்கப்படும். பின்னர் பழுதான இயந்திரங்கள் சரிசெய்யப்படும்.
ஜூலை 4ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலைமையில் வாக்கு இயந்திரங்கள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதை தொடந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து விளக்கப்படும்.

தமிழகம் முழுவதும் தற்போது 68,036 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் தற்போதுள்ள வாக்காளர்கள் எண்ணிக்கையை பொறுத்து தேவைப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு மையங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 1,78,357 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது உள்ளது. கண்ட்ரோல் யூனிட் 1,02,581 இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபேட் 1,08,732 இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. 30 சதவீத இயந்திரங்கள் கூடுதலாக கையிருப்பில் வைக்கப்படும். ஒரு வாக்குச்சாவடியில் 1500 வாக்காளர்கள் வாக்களிக்கலாம். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்படும். கால் ஆண்டுக்கு (ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1) ஒருமுறை 18 வயது நிரம்பிய இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை இணைத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post 2024ம் ஆண்டு எம்பி தேர்தலுக்கு தமிழ்நாட்டில் 1,78,357 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,2024 MP elections ,Chief Electoral Officer ,Satyapratha Sahu ,Chennai ,2024 parliamentary elections ,
× RELATED கடந்த தேர்தலை விட தற்போதைய நாடாளுமன்ற...