நாகை: நாகை அக்கரைப்பேட்டையில் பல நூற்றாண்டுகளை கடந்தும் சுமைதாங்கி கல் கம்பீரமாக நிலைத்து நிற்கிறது. நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை ஊராட்சியில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் எதிரில் பலநூறு ஆண்டுகளுக்கு முன் சுமைதாங்கி கல் அமைக்கப்பட்டது. வாகனங்களே இல்லாத காலத்தில் நாகை துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டை வழியாக பரவை, தெற்கு பொய்கைநல்லூர், வடக்கு பொய்கைநல்லூர் வழியாக தங்களது தலையில் காய்கறி மூட்டைகளை வணிகர்கள் சுமந்து செல்வர்.
அவ்வாறு வணிகர்கள் மற்றும் விவசாயிகள் தலையில் சுமந்து செல்லும் மூட்டைகளை இறக்கி வைத்து சற்று ஓய்வெடுப்பதற்கு வசதியாக அமைக்கப்பட்டது தான் சுமைதாங்கி கல். புயல்கள் மற்றும் பல இயற்கை சீற்றங்களை கடந்தும் சுமைதாங்கி கல் இன்றும் கம்பீரமாக நிற்கிறது. அக்கரைப்பேட்டையில் சாலையோரமாக இருக்கும் சுமைதாங்கி கல், நாகையில் தொண்டாற்றல் நிறைந்தவர்கள் அதிகம் வாழ்ந்த பகுதி என்பதை நமக்கு உணர்த்துகிறது. சுமைதாங்கி கல் என்பது பண்டைய தமிழர்களின் பாரம்பரிய பண்பாடுகளில் ஒன்றாகும். சுமைகளை சுமந்து செல்வோர் அதை பிறர் துணையின்றி எளிதாக இறக்கி வைக்கவும், தூக்கி கொள்வதற்காகவும் சுமைகல் அமைக்கப்பட்டது.
பண்டைய காலங்களில் ஆட்சியாளர்கள் விவசாய பயன்பாட்டுக்காக நீர்நிலைகளை உருவாக்கினர். பயணத்துக்காக சாலை வசதி ஏற்படுத்தியதோடு சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு வைத்ததுடன் பயணிகள் தங்கி செல்ல சத்திரங்களையும் கட்டினர். அந்த வகையில் சுமையுடன் செல்லும் பயணியின் சிரமத்தை போக்க சுமைதாங்கி கற்களை அமைத்து கொடுத்தனர். அதில் இன்றும் நாகை அருகே அக்கரைப்பேட்டையில் சுமைதாங்கி கல் கம்பீரமாக நிலைத்து நிற்கிறது. இந்த சுமைதாங்கி கல் இன்றளவும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. சுமைதாங்கி கல்லில் உட்கார்ந்து ஓய்வெடுக்கும், விளையாடவும் சிறுவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
The post நாகை அக்கரைப்பேட்டையில் பல நூற்றாண்டை கடந்தும் கம்பீரமாக நிற்கும் சுமைதாங்கி கல் appeared first on Dinakaran.