×

வாலிபர் படுகொலையில் 4 பேர் சிக்கினர்

புதுச்சேரி, ஜூன் 27: புதுச்சேரியில் தொழிலாளி படுகொலை சம்பவத்தில் அவரது மாஜி நண்பர் உள்பட 4 பேரை பிடித்து தனிப்படை அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறது. கொலைக்கான காரணம் குறித்து நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி, கொம்பாக்கம், பாப்பாஞ்சாவடி முதல் தெருவை சேர்ந்தவர் தும்பி என்ற ரமேஷ் (42), முருங்கப்பாக்கத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். முதலியார்பேட்டை நியமன எம்எல்ஏ அலுவலகம் அருகில் ரமேசும், இந்திரா நகர் காமராஜர் வீதியை சேர்ந்த மாஜி நண்பரான ஸ்டீபனும் மது அருந்தி கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஸ்டீபன் சக கூட்டாளிகளுடன் கத்தியுடன் வந்து ரமேஷை சரமாரி வெட்டியதோடு, பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையிலான போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். 2 தனிப்படை அமைத்து, கொலையாளிகளை தேடி வந்தனர்.

கடந்த ஜனவரி மாதத்தில் மதுவாங்கி தராத பிரச்னையில் ஸ்டீபனையும், அவரது தம்பி செந்திலையும், முன்விரோத தகராறில் ரமேஷ் கத்தியால் வயிற்றில் குத்தியதும், இவ்வழக்கில் ரமேஷை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்ததும் தெரியவந்தது. 3 மாதமாக சிறையில் இருந்த ரமேஷ் மே மாதத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். ஸ்டீபனுடன் பகைமை மறந்து மீண்டும் நட்புடன் பேசிவந்ததாக தெரிகிறது. இதனிடையே நேற்று முன்தினம் ஏஎப்டி சாலையில் மதுஅருந்திக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஏற்கனவே நடந்த சம்பவத்துக்கு பழிதீர்க்கும் வகையில் ஸ்டீபன் தனது கூட்டாளிகளான வேல்ராம்பேட் சதீஷ், முதலியார்பேட்டை ராஜி, பத்மநாபன் ஆகியோருடன் சதிதிட்டம் போட்டு கத்தியால் ரமேஷை சரமாரி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரி- கடலூர் எல்லை பகுதியில் பதுங்கியிருந்த ஸ்டீபன் உள்பட 4 பேரை இரவோடு இரவாக சுற்றிவளைத்த தனிப்படை அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

The post வாலிபர் படுகொலையில் 4 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Walliper massacre ,Puducherry ,Walliber massacre ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு