×

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை மாற்ற முடிவு: கே.எஸ்.அழகிரியின் பதவி காலம் நீட்டிக்கப்படுமா? சோனியாகாந்தியை சந்திக்க டெல்லியில் முகாம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி, இப்பதவியில் நான்கரை ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் யாரும் இப்பதவியில் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019ம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரது தலைமையின் கீழ் நாடாளுமன்ற தேர்தலில் 8 இடங்களிலும், சட்டமன்ற தேர்தலில் 18 இடங்களிலும் அக்கட்சி வெற்றி பெற்றது. இதனால் அவர் தலைவராக நீடித்து வருகிறார். ஆனாலும், அவர் பதவி காலம் நீடித்து செல்வதால் மற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்நிலையில், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் முழுவீச்சில் காங்கிரஸ் செயல்பட வேண்டும் என்பதில் டெல்லி தலைவர்கள் உறுதியாக உள்ளனர். இதனால் 4 மாநில காங்கிரஸ் தலைவர்களை மாற்றம் செய்து காங்கிரசை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை கட்சி தலைமை எடுத்து வருகிறது.

எனவே தமிழ்நாட்டிலும் கே.எஸ்.அழகிரியின் பதவி காலம் நீடித்து செல்வதால் அவரை மாற்றலாமா என்பது குறித்தும் டெல்லி தலைமை பரிசீலித்து வருகிறது. எனவே தலைவர் பதவியை பிடிக்க தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளிடையே கடும் போட்டி எழுந்துள்ளது. கட்சி தலைமையை முட்டி மோதி வருகின்றனர். இதற்கா பல மூத்த தலைவர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் டெல்லி தலைவர்களை சந்திக்க படையெடுத்த வண்ணம் உள்ளனர். தலைவர் பதவிக்கான போட்டியில் டாக்டர் செல்லக்குமார், சசிகாந்த் செந்தில், விஸ்வநாதன், திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம், விஜயதரணி உள்ளிட்டவர்கள் பெயர் அடிபடுகிறது. இவர்கள் அடங்கிய பட்டியல் ஏற்கனவே டெல்லி தலைமை தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த பட்டியலில் இருந்து ஒருவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாகவும் டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால் இப்போது தலைவரை மாற்றினால் தேர்தலை எதிர் கொள்வது சிரமமாக இருக்கக்கூடாது என்பது குறித்தும் மேலிடம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. தலைவரை மாற்றினால் முக்கிய நிர்வாகிகள் பலரை மாற்றம் செய்ய வேண்டும். மேலும் செயல் தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளையும் நிரப்ப வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளை அதிரடியாக எடுக்க வேண்டும் என்பதால் புதிய தலைவருக்கு சிக்கல்கள் வரும் வாய்ப்புள்ளது. இதனால் இப்போது மாற்றினால் சரியாக வருமா? என்றும் மேலிடம் ஆலோசித்து வருகிறது. ஆனாலும் மறுபுறம் தமிழ்நாடு காங்கிரசுக்கு சரியான தலைவரை தேர்வு செய்யும் பணியும் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, நாடாளுமன்ற தேர்தல் வரை தலைவர் பதவியை தனக்கு நீட்டித்து தர வேண்டும் என்ற கோரிக்கையுடன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் முகாமிட்டுள்ளார்.

நேற்று டெல்லி புறப்பட்டு சென்ற அவர் இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை சந்தித்துவிட்டு பின்னர் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளார். அவருக்கு நேரம் ஒதுக்கப்படும் பட்சத்தில் சோனியா காந்தியிடம் தனது கோரிக்கையை தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, கடந்த தேர்தல்களில் அதிக வெற்றிகளை பெற்று தந்துள்ளதால், தனக்கு வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலை எனது தலைமையில் சந்திக்க வாய்ப்பு தரும்படியும், அதேநேரம் அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவில் தான் தலையிடப் போவதில்லை என்றும், தன்னை மாற்றும் பட்சத்தில் தனது சார்பில் ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் சோனியா காந்தியிடம் தனது கோரிக்கையை வலியுறுத்த உள்ளதாக கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

The post தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை மாற்ற முடிவு: கே.எஸ்.அழகிரியின் பதவி காலம் நீட்டிக்கப்படுமா? சோனியாகாந்தியை சந்திக்க டெல்லியில் முகாம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Congress ,K.K. S. ,Adelakiri ,Delhi ,Sonyagandi ,Chennai ,K. S. Anadagiri ,Sonyagandhi ,
× RELATED இந்த தேர்தல் வாழ்வா, சாவா பிரச்னை கபட...