×

ஆசனூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை அட்டகாசம்: பொதுமக்கள், கால்நடைகளை துரத்தியதால் பரபரப்பு

சத்தியமங்கலம்: ஆசனூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டு யானையை விரட்ட முயன்ற பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இரவு மற்றும் பகல் நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில் இன்று காலை சத்தியமங்கலம் அருகே உள்ள ஆசனூர் மலைப்பகுதியில் சென்டர் தொட்டி கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை கரும்பு காட்டிற்குள் நுழைந்து கரும்பு பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தியது.

காட்டு யானை நடமாட்டத்தைக் கண்ட மலை அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். யானையை சத்தம் போட்டு விரட்ட முயன்றனர். அப்போது காட்டு யானை பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த கால்நடைகளை துரத்த தொடங்கியது. இதனால் பொதுமக்கள் யானையைக் கண்டு அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரம் அங்குமிங்கும் நடமாடிய காட்டு யானை பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. பகல் நேரத்தில் காட்டு யானை ஊருக்குள் புகுந்து பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை அச்சுறுத்தியதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆசனூர் அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை அட்டகாசம்: பொதுமக்கள், கால்நடைகளை துரத்தியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Atacasam ,Asanur ,Sathyamangalam ,Atakasam ,
× RELATED ஈரோடு மாவட்டம் ஆசனூரில் அதிகாலை சூறாவளி காற்றுடன் மழை