ஏற்காடு: ஏற்காட்டில் பழமை வாய்ந்த இருதய ஆண்டவர் ஆலய தேர் பவனி, கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி நடந்தது. நேற்று காலை கூட்டு திருப்பலி, சேலம் மறை மாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமையில் நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நேற்று இரவு பங்குத்தந்தை மரியஜோசப்ராஜ், சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். இதையடுத்து இயேசு கிறிஸ்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட தேரில் மின் விளக்கு அலங்காரத்துடன் தேர் பவனி நடந்தது. தேர்பவனி ஏற்காடு நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து, இறுதியில் இருதய ஆண்டவர் ஆலயத்தில் முடிவடைந்தது. தேர் பவனி சென்றபோது, கிறிஸ்து பங்கு மக்கள், இயேசு கிறிஸ்து பாடல்களை பாடி வந்தனர். இதையடுத்து இரவு 10.30 மணிக்கு முக்கிய நிகழ்வான கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை, பங்கு மக்கள் ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து
கொண்டனர்.
The post இருதய ஆண்டவர் ஆலய தேர் பவனி appeared first on Dinakaran.