×

இங்கிலாந்து சென்ற கோவை மாணவர் மர்மச்சாவு

கோவை: இங்கிலாந்து சென்ற கோவை மாணவர் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை கொண்டு வர முயற்சி நடக்கிறது. கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மகன் ஜீவந்த் (25). இவர் கடந்த 2015 முதல் 2019 வரை கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஇ படித்தார். பின்னர் இங்கிலாந்து பர்மிங்காமில் உள்ள ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. இன்டர்நேஷனல் பிசினஸ் படிக்க விண்ணப்பித்தார். அவருக்கு அங்கே படிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜீவந்த் தனது ஒரு ஆண்டு படிப்பிற்காக பர்மிங்காம் நகருக்கு சென்றார். அங்கே பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 20ம் தேதி மாலை 6.30 மணியளவில் ஜீவந்த் பல்கலைக்கழகம் அருகே உள்ள நூலகத்திற்கு படிக்க சென்றார். இரவு 9.30 மணியளவில் அவரது நண்பர்கள் ஜீவந்த்துக்கு போன் செய்து, சாப்பிட அழைத்தனர். அதற்கு அவர், ‘‘நீங்கள் போய் சாப்பிடுங்கள். நான் சிறிது நேரம் கழித்து வருகிறேன்’’ என தெரிவித்தார். ஆனால் இரவு 11 மணியை கடந்தும் ஜீவந்த் பல்கலைக்கழக விடுதிக்கு வரவில்லை. நண்பர்கள் அவரை மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என தகவல் வந்தது. இதுபற்றி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் மாயமான ஜீவந்த்தை தேடினர்.
இந்நிலையில் 21ம் தேதி அதிகாலை 4.30 மணி அளவில் பர்மிங்காம் கால்வாயில் உயிருக்கு போராடிய வாலிபரை போலீசார் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து யார்? என விசாரித்தனர். இதில் அவர் ஜீவந்த் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜீவந்த் உயிரிழந்தார்.

இதுபற்றி கோவையில் உள்ள ஜீவந்த்தின் பெற்றோருக்கு பல்கலைக்கழக நிர்வாகம் தகவலை தெரிவித்தது. ஜீவந்த் எப்படி பர்மிங்காம் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட நிலையில் கிடந்தார் என்பது தெரியவில்லை. அவரை யாரும் அடித்து கால்வாயில் தூக்கி வீசினார்களா? என விசாரிக்கப்படுகிறது. அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கு இந்திய தூதரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கோவை மாணவர் இங்கிலாந்தில் மர்மமாக இறந்த விவகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post இங்கிலாந்து சென்ற கோவை மாணவர் மர்மச்சாவு appeared first on Dinakaran.

Tags : Marmachau ,Gove ,UK ,Cove ,Govai ,Goo ,
× RELATED தர்மபுரி அருகே மாஜி ராணுவ வீரர் மர்மச்சாவு உடலை மீட்டு விசாரணை