×

மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால் காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்: வஞ்சிரம் ரூ.1200, பாறை ரூ.500, சங்கரா ரூ.600, நெத்திலி ரூ.150க்கு விற்பனை வாய்ப்பு

சென்னை: மீன்பிடி தடைக்காலம் முடிந்து 2வது ஞாயிற்றுக்கிழமை என்பதால், நேற்று சென்னை காசிமேட்டில் அதிகாலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. வஞ்சிரம் ரூ.1200, பாறை ரூ.500, சங்கரா ரூ.600, நெத்திலி ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த வாரம் முதல் விலை குறைய வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மீன்பிடி தடை காலம் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. இதனால், தமிழ்நாட்டில் 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சென்னை காசிமேடு துறைமுகத்தில் 1000க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.

கடந்த 14ம் தேதியோடு மீன்பிடி தடைகாலம் முடிந்தது. தடைகாலம் முடிந்ததையடுத்து 15ம் தேதி முதல் மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை குறைந்த விசைப்படகுகள் மட்டுமே கடலில் இருந்து கரை திரும்பின. அசைவ பிரியர்கள் எதிர்பார்த்த அளவிற்கு பெரியவகை மீன்கள் விற்பனைக்கு வரவில்லை. சிறியவகை வஞ்சிரம், சங்கரா, இறால், கடமா, வவ்வால், பாறை, நெத்திலி மீன்களே அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. அதே நேரத்தில் மீன்கள் விலையும் குறையாமல் தடைக்காலத்தில் இருந்தது போலவே இருந்தது.

இந்நிலையில் நேற்று தடைக்காலம் முடிந்து 2வது ஞாயிற்றுக்கிழமை ஆகும். இதனால், ஆழ்கடலுக்கு சென்ற அதிக அளவிலான விசைப்படகுகள் மீன் பிடித்து கொண்டு கரை திரும்பின. இதனால் மீன் வாங்க நேற்று அதிகாலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. காசிமேடு மீன்கள் பிரஷ்ஷாகவும், சுவையாகவும் இருக்கும் என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் அதிக அளவில் மீன்வாங்க காசிமேட்டிற்கு வந்திருந்திருந்தனர். பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து தற்போது சகஜ நிலை திரும்பியுள்ளது.

இதனால், காசிமேட்டில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட நேற்று அதிகமாக காணப்பட்டது. அதேநேரத்தில் கடந்த வாரத்தைபோல தான் மீன் விலை காணப்பட்டது. மீன் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. இருந்த போதிலும் விலையை பொருட்படுத்தாமல் அசைவ பிரியர்கள் மீன்களை வாங்கி சென்றனர். அதாவது வஞ்சிரம் கிலோ ரூ.1,000 முதல் ரூ.1200 வரை விற்கப்பட்டது. அதேபோல பாறை கிலோ ரூ.400 முதல் ரூ.500 வரை. இறால் ரூ.400 முதல் ரூ.1200 வரை. சங்கரா ரூ.300 முதல் ரூ.600 வரையும், வவ்வால் ரூ.400 முதல் ரூ.600 வரையும் விற்கப்பட்டது.

நண்டு ரூ.400 முதல் ரூ.650 வரையும், நெத்திலி ரூ.150 எனவும் விற்பனை செய்யப்பட்டது. வரும் வாரங்களில் ஆழ்கடலுக்கு சென்ற அனைத்து விசை படகுகளும் கரை திரும்ப வாய்ப்புள்ளது. அப்போது பெரிய வகை மீன்கள் அதிக அளவில் கரைக்கு கொண்டுவரப்படும். அப்போது மீன்களின் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக மீனவர்கள் கூறினர். இதேபோல நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன்மார்க்கெட், பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் மீன் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

The post மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால் காசிமேட்டில் குவிந்த அசைவ பிரியர்கள்: வஞ்சிரம் ரூ.1200, பாறை ரூ.500, சங்கரா ரூ.600, நெத்திலி ரூ.150க்கு விற்பனை வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Casimate ,Sankara ,Antili ,Chennai ,Chennai Casimate ,Cassimate ,Antheli ,
× RELATED காஞ்சி சங்கரா பல்கலைக்கழகத்தில் வேதபாடசாலை மாணவர்கள் ஆய்வு