×

நெல்லை வண்ணார்பேட்டை, சேரன்மகாதேவியில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ‘உயர்வுக்கு படி’ வழிகாட்டுதல் நிகழ்ச்சி

நெல்லை, ஜூன் 25: தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ்2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்காக “உயர்வுக்கு படி” என்னும் தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நெல்லை வண்ணார்பேட்டை, சேரன்மகாதேவியில் நடத்தப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் டாக்டர் கார்த்திகேயன் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொடர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து வருவாய் கோட்டங்களிலும் “உயர்வுக்கு படி” என்னும் தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் வருகிற 27ம் தேதி வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியிலும், ஜூலை 4ம் தேதி சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியிலும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டல், உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் உள்ள படிப்புகள், சேர்க்கை மற்றும் தேர்வு கட்டணம், உயர்கல்வியில் சேருவதற்கு வங்கிகளால் வழங்கப்படும் கல்விக் கடன்கள், அதற்கு தேவையான ஆவணங்கள், படிப்பு முடித்த பின்னர் அரசுப் பணியில் சேருவதற்கான போட்டித் தேர்வுகளும், அதனை அணுகும் முறை மற்றும் அரசால் நடத்தப்படும் போட்டித் தேர்விற்கான இலவச பயிற்சி மையங்கள் போன்றவை விளக்கமாக எடுத்துரைக்கப்பட உள்ளது.

மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் வழங்கப்படும் குறுகிய கால திறன் பயிற்சி, கல்லூரி கனவு சிற்றேடுகள், சமூக நலத்துறையால் செயல்படுத்தப்படும் சமூக நலப் பாதுகாப்புத்திட்டங்கள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் உதவித் தொகை திட்டங்கள், இடஒதுக்கீடு, மாணவர்களுக்கான இலவச விடுதி வசதிகள் போன்ற தகவல்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது. மாணவர்களும், பெற்றோர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post நெல்லை வண்ணார்பேட்டை, சேரன்மகாதேவியில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ‘உயர்வுக்கு படி’ வழிகாட்டுதல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Nellai Vannarpet ,Cheranmahadevi ,Nellai ,Tamil Nadu government ,Vannarpet ,
× RELATED சேரன்மகாதேவியில் குண்டாசில் வாலிபர் கைது