- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- முதலமைச்சர் கோப்பை 2023
- சென்னை
- முதலமைச்சரின் கோப்பை-2023 மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா
சென்னை: முதலமைச்சர் கோப்பை -2023 மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா 2023 ஜூன் மாதம் 30 ஆம் தேதி அன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார்கள். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவின் போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டுகளில் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் என அறிவித்தார்கள். அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி 2023ம் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் 2023ம் மாதம் முடிய நடைபெற்றது.
இந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் மூன்று இலட்சத்து எழுபத்து ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற 27,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் 17 இடங்களில் ஜுலை 01-ந் தேதி முதல் ஜுலை மாதம் 25-ந்தேதி வரை முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இந்த போட்டிகளில் பங்கேற்கவுள்ள 27,000க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள், பயிற்றுநர்கள், நடுவர்கள், அலுவலர்கள் மற்றும் தேசிய மாணவர் படை தன்னார்வலர்கள் அனைவருக்கும் போட்டி நடைபெறுகின்ற அனைத்து நாட்களிலும் தங்குவதற்கு வசதியாக தனியார் விடுதிகள் மற்றும் அரசு விருந்தினர் மாளிகை ஆகியவைகளில் 2000க்கும் மேற்பட்ட அறைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவ மாணவியர் விடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் போட்டி நடைபெறும் அனைத்து நாட்களிலும் மூன்று வேளை உணவு மற்றும் சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இடங்களில் காவல்துறை மூலம் உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படயுள்ளது. வீரர் வீராங்கனைகள் போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு செல்ல பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து இடங்களிலும் மருத்துவ வசதி ஏற்பாடுகள் சிறந்த முறையில் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. போட்டிகளை சிறப்பாக நடத்திட ஏதுவாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், மாநகர போக்குவரத்து கழகம், பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறை மற்றும் காவல் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
The post ஜூன் 30ம் தேதி ‘முதலமைச்சர் கோப்பை 2023’ மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.