வேளச்சேரி: வேளச்சேரி மெயின் சாலை கைவேலி பஸ் நிறுத்தம் முதல் பள்ளிக்கரணை மேம்பாலம் வரை சுமார் அரை கிலோ மீட்டர் இடைவெளியில் பழம், காய்கறிகள், கைவினை பொருட்கள், பூக்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் சமீபகாலமாக அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டு வியாபாரம் செய்து வருகிறார்கள். சில கடைக்காரர்கள் வெயிலின் காரணமாக, நிழலுக்காக பெரிய அளவிலான ராட்சத குடை விரித்து வைத்து அதனுள் உட்கார்ந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென வீசிய பலத்த காற்றில் பூக்கடைக்காரர் ஒருவர் நிழலுக்காக வைத்திருந்த பெரிய ராட்சத குடை ஒன்று எதிர்பாராதவிதமாக காற்றில் பறந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் தடுமாறி வாகனத்தை ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தினர். ஆனால் குடை தொடர்ந்து பறந்து சென்றது. அப்போது பூ கடையின் பெண் உரிமையாளர் சாலையின் குறுக்கே ஓடி சென்று குடையை பிடித்து நிறுத்தினார். ஆனாலும் காற்று வீசியதால் அங்குள்ள சென்டர் மீடியன் வரை சென்றது. பின்னர் அந்த பெண் போராடி குடையை மடித்து எடுத்து சென்றார். அனுமதியின்றி முக்கிய சாலையோரம் சந்தை போல் கடை வைத்து வியாபாரம் செய்பவர்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
The post பள்ளிக்கரணையில் பரபரப்பு காற்றில் பறந்த ராட்சத குடை: வாகன ஓட்டிகள் பீதி appeared first on Dinakaran.