×

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 4 லாரிகள் மூலம் சுமார் 180 டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றப்பட்டன

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 4 லாரிகள் மூலம் சுமார் 180 டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றப்பட்டன. தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டம் நடந்தது. அப்போது நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது. இந்நிலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கோரி வேதாந்தா நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்ற அனுமதி அளித்தது. மேலும் ஆலை கழிவுகளை அரசே அகற்ற முடிவு செய்தது. கழிவுகளை அகற்றுவதற்கான முழுச்செலவையும் ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை சேர்ந்த 2 அதிகாரிகள் உள்பட 9 பேர் கொண்ட மேலாண்மை குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஜிப்சம் கழிவுகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டது.

வேதியியல் கழிவான ஜிப்சத்தை உடைத்து பவுடராக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. வெள்ளிக்கிழமை முதல் ஆலையில் இருந்து ஜிப்சம் கழிவுகளை லாரிகளின் மூலம் வெளியேற்றும் பணி தொடங்கும் என்று ஆட்சியர் தெரிவித்திருந்தார். ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் கழிவுகளை அகற்றும் பணியை துணை ஆட்சியர் தலைமையிலான குழு கண்காணித்து வந்த நிலையில், இன்று 4 லாரிகள் மூலம் சுமார் 180 டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

The post தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 4 லாரிகள் மூலம் சுமார் 180 டன் ஜிப்சம் கழிவுகள் அகற்றப்பட்டன appeared first on Dinakaran.

Tags : Thoothukudi Sterlite ,Thoothukudi ,Tutukudi ,Toothukudi Sterlite ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...