×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஏன் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய கூடாது?: சிபிசிஐடிக்கு நீதிபதி கேள்வி

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி ஏன் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய கூடாது? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணையில் உள்ளது. கடந்த 10 மாதங்களாக சிபிசிஐடி விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி அப்துல் காதர், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரணை செய்தார்.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரில் சயான், மனோஜ், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி ஆகியோர் ஆஜராகினர். அப்போது முதல் குற்றவாளி சயான் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த சம்பவம் அரங்கேறிய பங்களாவில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. இதில் கொலை செய்யப்பட்டு கட்டிவைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட ஓம் பகதூர் கட்டிவைக்கப்பட்ட மரம் அகற்றப்பட்டுள்ளது. எனவே பங்களாவை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி இந்த வழக்கில் 2வதாக குற்றம்சாட்டப்பட்ட வாளையார் மனோஜ் என்பவர் வீட்டில் 2 வாரத்திற்கு முன்பாக சிபிசிஐடி போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். எந்தவொரு சம்மனும் கொடுக்காமல் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர் என்றும் குற்றம்சாட்டப்பட்டது. வாதத்தை கேட்ட நீதிபதி, கோடநாடு வழக்கில் சிபிசிஐடி ஏன் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமின்றி குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் சம்மன் கொடுக்காமல் விசாரணை செய்ய கூடாது என நீதிபதி அறிவுறுத்தினார். தொடர்ந்து புலன் விசாரணைக்கு வெளிமாநிலம் செல்வதால் தொலை தொடர்பு தகவல்களை ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாக சிபிசிஐடி தெரிவித்தது. மேலும் சிபிசிஐடி கால அவகாசம் கோரியதை அடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை ஜூலை 28ம் தேதிக்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் ஒத்திவைத்தார்.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஏன் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய கூடாது?: சிபிசிஐடிக்கு நீதிபதி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,CBCID ,Nilgiri ,CPCID ,Dinakaran ,
× RELATED குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில்...