×

சென்னையில் கடத்தப்பட்ட ராப் இசைக் கலைஞர் தேவ் ஆனந்த் 10 மணி நேரத்தில் மீட்பு!

புதுக்கோட்டை: சென்னையில் கடத்தப்பட்ட ராப் இசைக் கலைஞர் தேவ் ஆனந்த் 10 மணி நேரத்தில் மீட்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் போலீசார் வாகன தணிக்கையின்போது தேவ் ஆனந்தை மீட்டனர்.

மதுரையை சேர்ந்தவர் தேவ் ஆனந்த், நண்பர்களுடன் சேர்ந்து பாப் இசை கச்சேரி குழு நடத்தி வருகிறார். நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நண்பர்களுடன் இசை கச்சேரி முடித்துவிட்டு காரில் சென்று கொண்டிருந்தார். உடன் வந்த நண்பர்களில் இருவர் திருவேற்காட்டில் இருப்பதால் அவர்களை திருவேற்காட்டில் இறக்கிவிட்டு கல்பாக்கம் செல்வதற்காக தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலை, திருவேற்காடு அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் காரின் மீது இடித்ததால் காருக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டதா என்று இறங்கி பார்த்த போது எதிரே வந்த காரில் இருந்து இறங்கிய மர்ம கும்பல் கையில் கத்தியுடன் வந்து தேவ் ஆனந்தை மடக்கி பிடித்து இவரது அண்ணன் பணம் தர வேண்டும் அதனால் இவரை கடத்தி செல்வதாக கூறிவிட்டு மின்னல் வேகத்தில் தேவ் ஆனந்தை கத்தி முனையில் காரில் கடத்தி சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தேவ் ஆனந்தின் அண்ணன் சிரஞ்சீவி மதுரையில் சீட்டு நடத்தி பல பேருக்கு பணம் கொடுக்காமல் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட நபர்களில் சிலர் சிரஞ்சீவியை தேடி வந்த நிலையில் அவர் சிக்காததால் அவரது தம்பி தேவ் ஆனந்த் சென்னைக்கு வருவது அறிந்து கடத்தி சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திருவேற்காடு போலீசார் தனிப்படைகள் அமைத்து தேவ் ஆனந்தை கடத்தி சென்ற மர்ம கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கடத்தி சென்ற ராப் இசைக் கலைஞர் தேவ் ஆனந்தை மீட்க வேண்டும் என்ற நோக்கில் இன்று காலை முதல் தேடுதலில் ஈடுப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது அவ்வழியே 2 கார்கள் வந்துள்ளது, போலீசார் அதனை சோதனை செய்தபோது அதில் ராப் இசைக் கலைஞர் தேவ் ஆனந்த் இருந்துள்ளார். மேலும் அவருடன் கடத்தல்காரர்களான 5 பேர் இருந்துள்ளனர்.

இதையடுத்து ராப் இசைக் கலைஞர் தேவ் ஆனந்தை மீட்டு கடத்தலில் ஈடுபட்டவர்களை புதுக்கோட்டை மாவட்ட போலீசார் கைது செய்தனர்.

The post சென்னையில் கடத்தப்பட்ட ராப் இசைக் கலைஞர் தேவ் ஆனந்த் 10 மணி நேரத்தில் மீட்பு! appeared first on Dinakaran.

Tags : Dev Anand ,Chennai ,Pudukkotta ,Pudukkotai District ,Ponnamarawathi ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...