கொடைக்கானல்: மலைகளின் இளவரசியாம் கொடைக்கானல் இடைவிடாது சாரல் மழை பொழிந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரண்டு தினங்களாக தொடர்ந்து சாரல் மழை மற்றும் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கொடைக்கானலில் 35 மில்லி மீட்டர் மழையும், நேற்று 30 மி.மீ மழையும் பதிவானது. இதனால், கொடைக்கானலில் நிலவிய வறண்ட சூழ்நிலை மாறி குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் இந்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள தோட்டக்கலைப் பயிர்களான கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த மழை உதவும் என தெரிவித்துள்ளனர். மேலும், கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் குளிர்ந்த சூழ்நிலையையும், சாரல் மழையையும் ரசித்துச் சென்றனர். கொடைக்கானலில் வறண்டு இருந்த நீர்வீழ்ச்சிகளில் நீர் கொட்ட ஆரம்பித்துள்ளது. இந்த மழை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
The post ‘இளவரசியை’ இடைவிடாது நனைக்கும் சாரல்: கொடைக்கானலில் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.