சென்னை: தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர்கள் நல வாரியம், நாட்டு நலப்பணித்திட்டம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு இணைந்து முன்னெடுக்கும் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி வரும் செப்டம்பர் மாதம் நடக்கிறது.
தமிழக கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் 1076 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு கோடி பனை விதைகள் பதியமிடப்படவுள்ளது.
இப்பணியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஒரு லட்சம் பேர்கள் ஈடுபடவுள்ளனர். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆகஸ்ட் மாதம் பனை விதைகள் சேகரிக்கும் பணி தொடங்குகிறது. பனை விதைகள் சேகரிப்பில் சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள பனை வாரிய அலுவலகத்தில், ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியின் முன்னேற்பாடுகள் குறித்து தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர்கள் நல வாரியத்தலைவர் ஏ.நாராயணனுடன் விவாதிக்கும் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு, வாரிய செயலாளர் மாதவன், நிர்வாக அலுவலர் சுடலை, வழக்கறிஞர் கண்ணன், வாரிய தலைவரின் நேர்முக உதவியாளர் டேவிட் ஜெபராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி வரும் செப்டம்பர் மாதம் தொடக்கம் appeared first on Dinakaran.