×

வாலாஜாபாத் ஒன்றியத்தில் இடிந்து விழும் நிலையில் சமுதாய கூடம்: புதிதாக கட்டித்தர வலியுறுத்தல்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெண்குடி கிராம பகுதியில் ஒரு சமுதாயக்கூடம் பழுதடைந்து, பயன்பாட்டு இன்றி கிடக்கிறது. இக்கட்டிடத்தை இடித்துவிட்டு, இங்கு புதிதாக கூடுதல் பரப்பளவு மற்றும் நவீன வசதிகளுடன் சமுதாயக் கூடம் கட்டித் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒட்டிவாக்கம் ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், இசேவை மைய கட்டிடம், கிராம நிர்வாக அலுவலகம், சமுதாயக் கூடம் உள்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள ஏழை மக்களின் வீட்டு விசேஷங்களின் பயன்பாட்டுக்காக, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சிறிதாக சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது.

இந்த சமுதாயக் கூடத்தில் குறைந்த கட்டணத்தில் ஏழை மக்கள், தங்களின் வீட்டு விசேஷங்களை நடத்தி பயன்பெற்று வந்தனர். தற்போது இந்த சமுதாயக் கூடம் முறையான பராமரிப்பின்றி, ஆங்காங்கே கட்டிட விரிசல்களுடன் பழுதடைந்து, இடிந்து விழும் அபாயநிலையில் உள்ளது. இதனால் அக்கட்டிடம் பயன்பாடு இன்றி, தற்போது பல்வேறு சமூகவிரோத செயல்களுக்கு புகலிடமாக மாறிவிட்டது. மேலும், அக்கூடத்தை சுற்றிலும் செடி,கொடிகள் புதர் பகுதிகளாக மாறி பரிதாபமாக காட்சியளிக்கிறது. எனவே, இந்த பழுதான சமுதாயக் கூடத்தை முற்றிலும் இடித்துவிட்டு, போதிய நிதி ஒதுக்கீடு செய்து, இங்கு புதிதாக கூடுதல் பரப்பளவு மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய சமுதாய நலக்கூடம் கட்டி பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post வாலாஜாபாத் ஒன்றியத்தில் இடிந்து விழும் நிலையில் சமுதாய கூடம்: புதிதாக கட்டித்தர வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Collapsing Community Hall ,Walajabad Union ,Walajahabad ,Venkudi ,Wallajabad Union ,Dinakaran ,
× RELATED வாலாஜாபாத் பேரூராட்சியில் மினி...