×

ஆறுமுகநேரி – அடைக்கலாபுரம் சாலையில் நெடுஞ்சாலை துறையின் பிரமாண்ட பாதுகாப்பு எச்சரிக்கை பதாகைகள்: இனியாவது விபத்துகள் குறையுமா?

ஆறுமுகநேரி: தூத்துக்குடி – திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஏராளமான கிராமங்கள் அமைந்துள்ளன. மேலும் சாலையும் ஆங்காங்கே பெரும் வளைவுகளை கொண்டுள்ளது. இதனால் கிராம மக்கள் சாலைகளை கடக்கும்போதும், திருச்செந்தூர் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்லும்போதும் வேகமாக செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. சாலை வளைவு, பாதசாரிகள் கடக்கும் பகுதியில் எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தாலும் அவை சிறிய அளவிலேயே இருப்பதாகவும் குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்நிலையில் தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பிரமாண்ட சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டு வருகிறது. ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆறுமுகநேரி – அடைக்கலாபுரம் சாலையில் 3 இடங்களில் நெடுஞ்சாலை பாதுகாப்பு எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன. பாதசாரிகள் கடக்கும் பகுதி, அபாயகரமான வளைவு என 100 மீட்டர் முன்னதாகவே இந்த பிரமாண்ட எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன.

வாகன ஓட்டுநர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பிரமாண்டமாக எச்சரிக்கை விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு இருப்பதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், தனியார் பள்ளிக்கு அடுத்து வலதுபுறமாக வைக்கப்பட்டுள்ள போர்டு சாலையை ஒட்டி அமைக்கப்பட்டு உள்ளது. எதிரே வரும் வாகனங்களுக்கு கனரக வாகனங்கள் வழிவிட ஒதுங்கும்போது இந்த பதாகையில் இடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு நடத்தி சாலையில் இருந்து சில அடி தூரம் இந்த போர்டை தள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதுநாள் வரை சிறிய அளவிலான எச்சரிக்கை போர்டுகள் இருந்து வந்த நிலையில், வாகனங்கள் தொலைவில் வரும்போதே ஓட்டுநர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தற்போது பிரமாண்ட பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளதால் இனியாவது விபத்துகள் குறையுமா? என கிராம மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post ஆறுமுகநேரி – அடைக்கலாபுரம் சாலையில் நெடுஞ்சாலை துறையின் பிரமாண்ட பாதுகாப்பு எச்சரிக்கை பதாகைகள்: இனியாவது விபத்துகள் குறையுமா? appeared first on Dinakaran.

Tags : Highway Department ,Alakkalapuram Road ,Thoothukkudi ,Thiruchendur highway ,Ankangay ,
× RELATED அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட...