×

அரியலூர் அருகே உடலில் காயங்களுடன் வாலிபர் மர்மச்சாவு

 

அரியலூர், ஜூன் 22: அரியலூர் அருகே வாலிபர் உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அரியலூர் அரசு மருத்துவமனை முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள திருப்பெயர் காலனி தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் நல்லதம்பி(38). இவருக்கு சத்யா (34) என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நல்லதம்பி கடந்த 10 நாட்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பினார்.

பின்னர் அவர், தனது மனைவி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெரம்பலூர் மாவட்டம், கீழமாத்தூரில் வசிக்கும் தனது மாமனார் வீட்டுக்கு கடந்த வாரம் சென்றார். இந்நிலையில் நேற்று காலை சடைக்கன்பட்டி பெட்ரோல் பங்க் அருகே ஒரு மரத்தில் நல்லதம்பி உடலில் படுகாயங்களுடன் தூக்கில் சடலமாக தொங்கினார். அவ்வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து உடனே குன்னம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த நல்லதம்பியின் உறவினர்கள் மற்றும் திருப்பெயர், கீழமாத்தூர் பொதுமக்கள் ஆகியோர் நல்லதம்பி சாவில் மர்மம் இருப்பதாகவும், முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு அரியலூர் அரசு மருத்துவமனை முன் நேற்று மாலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற அரியலூர் நகர போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post அரியலூர் அருகே உடலில் காயங்களுடன் வாலிபர் மர்மச்சாவு appeared first on Dinakaran.

Tags : Marmachau ,Ariyalur ,
× RELATED தர்மபுரி அருகே மாஜி ராணுவ வீரர் மர்மச்சாவு உடலை மீட்டு விசாரணை