×

உதய் திட்டத்தில் நான் தான் கையெழுத்திட்டேன்: தங்கமணி ஒப்புதல்

ராசிபுரம்: ‘உதய் மின் திட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது நான் தான் கையொப்பமிட்டேன் என முன்னாள் அமைச்சர் தங்கமணி ஒப்புதல் அளித்து உள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு பேசியதாவது: மின்கட்டண உயர்வுக்கு நான்தான் காரணம் எனவும், அதிமுக அரசுதான் காரணம் எனவும், உதய் மின் திட்டம்தான் காரணம் எனவும் கூறி வருகிறார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதிதான் நான் கையெழுத்திட்டேன்.

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களும் கையெழுத்திட ஒப்புதல் அளித்த பின்புதான், தமிழ்நாடு கடைசியாக உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டது. அதுவும் விவசாய மின் இணைப்பிற்கு மீட்டர் பொருத்துவது கூடாது. மாதந்தோறும் மின் கட்டணம் அல்லது 3 மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டண உயர்வு போன்ற ஒப்பந்தத்தை நடைமுறை படுத்தக்கூடாது என, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பி, ஒன்றிய அமைச்சர் பியூஸ்கோயலிடம் ஒப்புதல் பெற்ற பின்பு தான், தமிழகம் கடைசி மாநிலமாக உதய் மின் திட்டத்திற்கு நான் கையொப்பம் இட்டேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். ‘மின் கட்டணம் உயர்வுக்கு நாங்கள் காரணமில்லை’ என்று அதிமுக கூறி வரும் நிலையில், தற்போது, மாஜி மின்துறை அமைச்சரே, ‘உதய் மின் திட்டத்தில் நான்தான் கையெழுத்திட்டேன்’ என்று ஒப்புதல் அளித்து உள்ளார். இதை பார்க்கும்போது ‘பூனை குட்டி வெளியே வந்துவிட்டது’ என்ற பழமொழிதான் ஞாபகம் வருகிறது.

The post உதய் திட்டத்தில் நான் தான் கையெழுத்திட்டேன்: தங்கமணி ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Uday ,Thangamani ,Rasipuram ,Minister ,Dinakaran ,
× RELATED வட்டார மருத்துவ அலுவலருக்கு பணி நிறைவு பாராட்டு விழா