×

சைலேந்திரபாபு வருகிற 30ம் தேதியுடன் ஓய்வு தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? பட்டியல் தயாரிப்பு குறித்து டெல்லியில் முக்கிய ஆலோசனை

சென்னை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வருகிற 30ம் தேதியுடன் ஓய்வு பெறுவதால், புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. இதற்காக தமிழக அதிகாரிகள் டெல்லி செல்கின்றனர்.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வருகிற 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். 29ம் தேதி பக்ரீத் பண்டிகை வருகிறது. இதனால் 28ம் தேதி அல்லது 30ம் தேதி காலையில் புதிய டிஜிபிக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும். வழக்கமாக சட்டம் ஒழுங்கு டிஜிபியை தேர்வு செய்ய வேண்டும் என்றால், டிஜிபி அந்தஸ்தில் தகுதியான நபர்களை ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அதில் மாநில அரசு அந்த 3 பேரில் ஒருவரை தேர்வு செய்வார்கள். அதன்படி தமிழக டிஜிபியை தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தலைமை செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்கின்றனர். உள்துறை செயலாளர் அமுதா, இன்று மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு டிஜிபியை தேர்வு செய்வதற்கான பட்டியலை எடுத்துச் சென்றுள்ளார்.

அந்தப் பட்டியலில், டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோரா, ஊர்காவல் படை டிஜிபி பி.கே.ரவி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவலர் வீட்டு வசதி வாரிய தலைவர் ஏ.கே.விஸ்வநாதன், தீயணைப்பு துறை இயக்குநர் ஆபாஷ் குமார், ஒன்றிய உளவுத்துறை தென் மண்டல இயக்குநர் டி.வி.ரவிசந்திரன், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இயக்குநர் சீமா அகர்வால், சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி, இந்தோ- திபெத் எல்லை காவல்படை டிஜிபி ராஜீவ் குமார், போலீஸ் பயிற்சிக் கல்லூரி டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அபய்குமார் சிங், மின்வாரிய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஜிபி கே.வன்னிய பெருமாள் ஆகியோர் உள்ளனர். இந்தப் பட்டியலில் தகுதியான 3 பேரின் பெயர்கள் இறுதி செய்யப்படும். பின்னர் அந்தப் பட்டியல் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்தப் பட்டியலில் உள்ள 3 பேரில் ஒருவரை தமிழக அரசு தேர்வு செய்யும். டெல்லியில் ஒன்றிய அரசுடன் ஆலோசனை நடத்திய பிறகு தமிழக அதிகாரிகள் இன்று இரவு சென்னை திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.

The post சைலேந்திரபாபு வருகிற 30ம் தேதியுடன் ஓய்வு தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? பட்டியல் தயாரிப்பு குறித்து டெல்லியில் முக்கிய ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Shailendrababu ,DGP ,Tamilnadu ,Delhi ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...