சென்னை: பிரிந்து வாழ்ந்து வரும் கணவர், ஆபாச மெசேஜ் அனுப்பி மிரட்டல் விடுத்து வருகிறார் என சின்னத்திரை நடிகை ரட்சிதா போலீசில் புகார் அளித்தார். டி.வி. சீரியலில் நடித்து பிரபலமானவர் ரட்சிதா. சில ஆண்டுகளுக்கு முன் தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அய்யப்பன்தாங்கல் பகுதியில் ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ரட்சிதாவும், அவரது கணவர் தினேஷும் தனித்தனியே வசிக்கின்றனர். இந்நிலையில் நடிகை ரட்சிதா, பிரிந்து வாழும் கணவர் தினேஷ், தன்னுடைய செல்போனுக்கு கடந்த சில நாட்களாக ஆபாச மெசேஜ்களை அனுப்புவது மற்றும் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுகிறார் என நேற்று காலை மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார், தினேஷை காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். அப்போது, நடிகை ரட்சிதா, விவாகரத்து பெற விரும்பினால் நீதிமன்றத்தை நாடிக்கொள்ளலாம் என தினேஷ் கூறிவிட்டு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து நடிகை ரட்சிதா விடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
The post பிரிந்து வாழ்ந்து வரும் கணவர் ஆபாச மெசேஜ் அனுப்பி மிரட்டல்: சின்னத்திரை நடிகை போலீசில் புகார் appeared first on Dinakaran.