×

கருங்கலில் இளைஞர்கள் வைத்த பேனரால் பரபரப்பு’ ‘திருமண வரன்களை தடுக்கும் ஆசாமிகளுக்கு நன்றி’: புகைப்படம், பெயர் வெளியிடப்படும் என எச்சரிக்கை

கருங்கல்: கருங்கல் அருகே திருமண வரன்களை தடுக்கும் ஆசாமிகளின் புகைப்படம், பெயர் வெளியிடப்படும் என இளைஞர்கள் சிலர் பேனர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு திருமணம் செய்வதுதான் பெரும்பாடாகிவிட்டது. பெண்கள் படித்துவிட்டு நல்ல வேலையில் இருப்பதால் இப்போதெல்லாம் அவர்கள் தான் நிறைய எதிர்பார்க்கின்றனர். இதனால் பல பகுதிகளில் 30 வயதை கடந்த பிறகும் பிரம்மச்சாரியாக வாழும் ஆண்கள் அதிகம் தான்.

அதிலும் திருமணம் நடக்கும் என கனவிலேயே வாழ்ந்துவரும் 90ஸ் கிட்ஸ்களின் நிலைமையோ பரிதாபம் தான். சரி, கிடைத்தால் போதும் என எப்படியோ, எங்கிருந்தோ ஒரு பெண்ணை பார்த்து திருமணம் நிச்சயிக்கப்பட்டாலும், மாப்பிள்ளை பற்றி விசாரிக்க வரும் பெண் வீட்டாரிடம் நம்மூரில் இருக்கும் சில விஷ கிருமிகள், இந்த பையனுக்கா பெண் கொடுக்கிறீர்கள்?, இந்த பையன் எப்படிப்பட்டவன் தெரியுமா?…. என இழுத்தபடி திருமணத்தை சிலர் தடுத்துவிடுகின்றனர்.

அவர்களுக்கு பகிரங்கமாக நல்ல பாடம் எடுக்கப்போவதாக எண்ணி, கருங்கல் அருகே இதனால் பாதிக்கப்பட்ட சில இளைஞர்கள் சற்று ஒருபடி மேலே போய் பேனர் வைத்து தங்களின் ஆதங்கத்தை கொட்டியுள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு: அந்த பேனரில், வணக்கம் முக்கிய அறிவிப்பு. கருங்கல் மேலச்சுண்டவிளை பகுதியில் ஒருசில நபர்களின் திருமண வரன்களை மட்டும் தடுத்து நிறுத்தும் அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி… நன்றி… நன்றி… மேலும் தங்களது நற்பணிகள் தொடருமானால் சம்பந்தப்பட்டவளுடைய பெயர் மற்றும் புகைப்பட ஆதாரத்துடன் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்! இப்படிக்கு பாதிக்கப்பட்டவர். என அந்த பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான பேனர்கள் கருங்கல் பத்திரப்பதிவு அலுவலகம், மேலச்சுண்டவிளை உள்பட 5க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த பேனரால் அந்த பகுதியில் திருமண வரன்களை பதம்பார்க்கும் நபர்கள் கலக்கத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கருங்கலில் இளைஞர்கள் வைத்த பேனரால் பரபரப்பு’ ‘திருமண வரன்களை தடுக்கும் ஆசாமிகளுக்கு நன்றி’: புகைப்படம், பெயர் வெளியிடப்படும் என எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Asamis ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...