டெகுசிகல்பா : ஹோண்டுராஸ் நாட்டில் உள்ள சிறையில் நடைபெற்ற கலவரத்தில் 41 பெண் கைதிகள் எரித்துக் கொல்லப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹோண்டுராஸ் தலைநகர் டெகுசிகல்பாவின் புறநகர் பகுதியில் சிகாஸ் எனப்படும் பெண்களுக்கான சிறைச் சாலை உள்ளது. குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற 800க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் இதில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் நேற்று 2 கைதிகளின் குழுக்கள் இடையே மோதல் வெடித்தது. இரும்பு தடிகள், கத்திகள், கட்டைகள், கற்களை கொண்டு கைதிகள் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டதில் சிறையின் ஒரு பகுதி தீக்கிரையாக்கப்பட்டது.
இந்த வன்முறையில் பெண் கைதிகள் 41 பேர் கொல்லப்பட்டனர். இதில் பாதிக்கும் மேற்பட்ட கைதிகள் எரித்துக் கொலை செய்யப்பட்டதாக காவலர்கள் தெரிவித்தனர். சிறை காவலர்களால் வன்முறையை கட்டுப்படுத்த முடியாததை அடுத்து சிறப்பு அதிரடி படை துப்பாக்கிச் சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வன்முறையில் காயம் அடைந்துள்ள 40 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹோண்டுராஸ் சிறைகளில் குழு மோதல்கள் நீண்ட காலமாகவே தொடர்ந்து வருகிறது. 2019ம் ஆண்டில் நடைபெற்ற மோதலில் 18 கைதிகளும் 2012ல் சிறையில் நிகழ்ந்த குழு மோதல்களில் 350 கைதிகளும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
The post ஹோண்டுராஸ் பெண்கள் சிறையில் கலவரம்…இரும்பு தடிகள், கத்திகள் கொண்டு பயங்கர தாக்குதல்.. 41 கைதிகள் எரித்துக் கொல்லப்பட்டனர்.! appeared first on Dinakaran.