
செங்கம், ஜூன் 21: செங்கம் அருகே பைக் மீது ஜேசிபி மோதி 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயடைந்த மற்றொரு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கொட்டகுளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் அசோகன் மகன் அரவிந்தன்(17), மண்ணப்பன் மகன் ரோகன்(17), ராஜேந்திரன் மகன் விஜி(17). இவர்கள் 3 பேரும் கட்டிட தொழிலாளிகள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 3 பேரும் ஒரே பைக்கில், அம்மாபாளையத்திலிருந்து கொட்டகுளம் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, கொட்டகுளம் கிராமம் அருகே வந்தபோது எதிரே வந்த ஜேசிபி, பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே அரவிந்தன் உடல் நசுங்கி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி தேன்மொழி வெற்றிவேல், மேல்செங்கம் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அரவிந்தனின் சடலத்ைத கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த ரோகன், விஜி ஆகிய 2 பேரையும் அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரோகன் நேற்று காலை உயிரிழந்தார். விஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த மேல்செங்கம் போலீசார் ஜேசிபியை பறிமுதல் செய்து தப்பிச்சென்ற டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post பைக் மீது ஜேசிபி மோதி 2 சிறுவர்கள் பலி மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை செங்கம் அருகே சோகம் appeared first on Dinakaran.