×

வாகன நெரிசலால் பாதிப்பு பைபாஸ் ரோடு அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

 

பரமக்குடி, ஜூன் 21: பரமக்குடி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட எமனேஸ்வரம் பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அதிகளவில் கைத்தறி பட்டு உற்பத்தி செய்யும் நெசவாளர்கள் உள்ளனர். எமனேஸ்வரம், இளையான்குடி விலக்கு ரோட்டில் இருந்து நயினார்கோவில் செல்லும் பிரதான ரோடு உள்ளது. இந்த ரோட்டின் ஆரம்பம் முதல் ஒட்டு மொத்தமாக இரண்டு பகுதிகளிலும் கடை மற்றும் வீடுகள் அதிகளவில் உள்ளன.

அஞ்சலகம், வங்கிகள், பட்டு பஜார் கடந்து நேருஜி மைதானம் வழியாக நயினார்கோவில் செல்ல வேண்டும். இதன் வழியாக தினமும் 50க்கும் மேற்பட்ட முறை பஸ்கள் வந்து செல்கின்றன.
நயினார்கோவில் வழியாக பாண்டியூர், ராமநாதபுரம் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் டூவீலர்கள் நூற்றுக்கணக்கில் இதன் வழியாக செல்வதாலும், எமனேஸ்வரம் பகுதியில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாலும் குறுகிய ரோட்டில் வாகனங்கள் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. மேலும் விசேஷ நாட்களில் பட்டு பஜார் பகுதிகளில் அதிகமான மக்கள் வந்து செல்வதால் பஸ்கள் இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே, இளையான்குடி ரோட்டில் இருந்து பைபாஸ் அமைத்து எமனேஸ்வரம் உள் பகுதியில் வாகனங்கள் செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எமனேஸ்வரன் ராமச்சந்திரன் கூறுகையில், பரமக்குடியில் இருந்து நயினார்கோவில் செல்லும் சாலை எமனேஸ்வரம் நகர் பகுதிக்குள் செல்வதால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. ஆகையால், எமனேஸ்வரத்தில் பைபாஸ் சாலை அமைக்க வேண்டும் என கூறினார்.

The post வாகன நெரிசலால் பாதிப்பு பைபாஸ் ரோடு அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Paramakkudy ,Emaneswaram ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டில் மின்சாரம் தாக்கி இறந்த...