×

யோகா விழாவிற்கு ஆளுநர் சிதம்பரம் சென்றதால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: செங்கையில் வாகன ஓட்டிகள் அவதி

 

செங்கல்பட்டு: சிதம்பரத்தில் யோகா விழாவிற்காக, ஆளுநர் ஆர்.என். ரவி சென்றதால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டது. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இன்று யோகா விழா நடைப்பெறுகிறது. இதில், சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னையில் இருந்து சாலை மார்கமாக நேற்று மாலை சிதம்பரம் நோக்கி, தனது கான்வாய் வாகனங்கள் அணிவகுத்து சென்றார்.

இதையடுத்து, ஆளுநர் கார் மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டூ வீலர், கார், பேருந்து உட்பட அனைத்து வாகனங்களையும் எவ்வித முன்னறிவிப்பின்றி, செங்கல்பட்டு நகர் வழியாக போலீசார் திருப்பி அனுப்பினர். மாலை நேரம் பள்ளிகள் முடிந்து மாணவர்கள் வீடு திரும்பும் நேரத்தில், தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அனைத்து வாகனங்களையும் திருப்பி அனுப்பியதால், செங்கல்பட்டு நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக, செங்கல்பட்டு அருகே புலிப்பாக்கம், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், செங்கல்பட்டு – காஞ்சிபுரம் சாலை என பல இடங்களில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால், பள்ளிகள் முடிந்து மாணவ, மாணவியர்கள் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். ஆளுநர் வருகைக்காக, அனைத்து வாகனங்களையும், செங்கல்பட்டு நகர் வழியாக திருப்பி விட்டதால், அப்பகுதியில், சுமார் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை சரி செய்ய ஒரு போக்குவரத்து போலீசார் கூட இல்லை. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்த போக்குவரத்து நெரிசலில் அவசர உதவிக்கு சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனமும் சிக்கியது. ஆளுநர் சென்னையில் இருந்து சிதம்பரம் செல்ல செங்கல்பட்டு நகரில் அனைத்து வாகனங்களையும் மாற்று பாதையில் அனுப்பி வைத்தது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் சீராகி வாகனங்கள் சென்றன.

The post யோகா விழாவிற்கு ஆளுநர் சிதம்பரம் சென்றதால் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: செங்கையில் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Chennai-Trichy highway ,Governor ,Chidambaram ,Senkai ,Chengalpattu ,R.N. ,Chennai-Trichy National Highway ,Ravi ,Dinakaran ,
× RELATED ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி;...