×

மனைவியுடன் தகாத உறவு இருப்பதாக சந்தேகம் வாலிபரை ஏரியில் தள்ளிவிட்டு கொன்ற கொத்தனார் கைது

துரைப்பாக்கம்: மனைவியுடன் தகாத உறவு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதால், உறவினர் வாலிபரை ஏரியில் தள்ளிவிட்டு கொலை செய்த கொத்தனாரை போலீசார் கைது செய்தனர். பெருங்குடி ஏரியில் வாலிபர் ஒருவரின் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, நேற்று முன்தினம் காலை போலீசார் அங்கு வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபரின் கழுத்தில் சிறிய காயம் காணப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், இறந்தவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ராஜிவ்காந்தி (32) என்பது தெரியவந்தது. இவரது உறவினர் விஜயகாந்த் (37), தனது குடும்பத்துடன் கடந்த சில மாதங்களாக பெருங்குடி, பிள்ளையார் கோயில் தெருவில் தங்கி, அதே பகுதியில் கட்டிட வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வேலை தேடி சென்னை வந்த ராஜிவ்காந்தி, உறவினரான விஜயகாந்த் வீட்டில் தங்கி, கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இருவரும் வேலை முடிந்து இரவு நேரத்தில் மது அருந்துவது வழக்கம். இதனிடையே, விஜயகாந்த்தின் மனைவியுடன் ராஜிவ்காந்தி நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இதனால், தனது மனைவியுடன் ராஜிவ்காந்திக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக விஜயகாந்துக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால், அத்திரமடைந்த அவர், கடந்த 16ம் தேதி இரவு மது அருந்த ராஜிவ்காந்தியை அழைத்துச் சென்றுள்ளார். இருவரும் பெருங்குடி ஏரிக்கரையில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த விஜயகாந்த், ராஜிவ்காந்தியை தாக்கி ஏரியில் தள்ளிவிட்டு, ஒன்றும் தெரியாததுபோல் வீட்டிற்கு வந்துள்ளார். இதில், நீரில் மூழ்கிய ராஜிவ்காந்தி பரிதாபமாக இறந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து, போலீசார் விஜயகாந்தை நேற்று கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post மனைவியுடன் தகாத உறவு இருப்பதாக சந்தேகம் வாலிபரை ஏரியில் தள்ளிவிட்டு கொன்ற கொத்தனார் கைது appeared first on Dinakaran.

Tags : Mason ,Durai Pakkam ,
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை