×

வீட்டில் தங்க இடம் கொடுத்த போது மகனின் நண்பனுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் பெண் கைது

பெரம்பூர்: கொரட்டூர் பகுதியில் மகனின், 17 வயது நண்பனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கொரட்டூர் எல்லையம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி (37). இவர், அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 17ம் தேதி புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், என் மகனின் நண்பனான பட்டரவாக்கம் ஞானமூர்த்தி நகரை சேர்ந்த நவீனின் தாய் ஈராபாய் (எ) சத்யபிரியா (35), குடும்ப தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி, எங்களது வீட்டில் ஒன்றரை மாதமாக தங்கியிருந்தார்.

அப்போது, எனது மகனுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பட்டரவாக்கம் ஞானமூர்த்தி நகரில் உள்ள வீட்டில் இருந்த சத்தியபிரியாவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், சத்யபிரியாவின் மகன் நவீன் தினமும் தனது தாயை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் வேதனையடைந்த சத்தியபிரியா, வீட்டில் இருந்து வெளியேறி, மகன் நவீனின் நண்பனான பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவன் வீட்டிற்குச் சென்று, ஒரு மாதத்திற்கும் மேலாக அந்த வீட்டிலேயே தங்கியுள்ளார்.

அப்போது சிறுவனுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் பட்டரவாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்குச் செல்ல நினைத்த சத்தியபிரியா, பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவனையும் தன்னுடன் வருமாறு கூறி அவனுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், தனது தாய் வளர்மதியிடம் கூறியதை தொடர்ந்து, அவர் போலீசில் புகாரளித்தது தெரிய வந்தது. இதையடுத்து சத்தியபிரியாவை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

The post வீட்டில் தங்க இடம் கொடுத்த போது மகனின் நண்பனுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் பெண் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Korattur ,Dinakaran ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு