×

ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருந்த நேரத்தில் ‘ஓசி’ விருந்து சாப்பிட போய் தர்மஅடி வாங்கிய கும்பல்: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சுவாரஸ்யம்

மும்பை: மகாராஷ்டிராவில் திருமண மண்டபத்தில் ஓசி விருந்து சாப்பிட போன கும்பலுக்கு உறவினர்கள் தர்மஅடி கொடுத்து அனுப்பி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கோரேகானில் வசிக்கும் ஜாவேத் குரேஷி என்பவர், தனது 17 வயது உறவினர் மகன் மற்றும் சில நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக நகர் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தார். இரு சக்கர வாகனங்களில் சென்ற அவர்கள், ஜோகேஸ்வரி என்ற இடத்தை அடைந்ததும், அங்குள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியையும், தடபுடல் விருந்து நடப்பதையும் பார்த்தனர். எப்படியாவது திருமண வீட்டின் விருந்து உணவை சாப்பிட வேண்டும் என்ற ஆசை அவர்களுக்குள் எழுந்தது. அதையடுத்து அவர்கள் டிப்டாப்பாக திருமண மண்டபத்திற்குள் நுழைந்தனர். மணமேடைக்கு அவர்கள் செல்லவில்லை. நேராக விருந்து நடக்கும் இடத்திற்கு சென்றனர்.

டேபிள் சேரில் வரிசையாக அமர்ந்த அவர்களுக்கு உணவும் பரிமாறப்பட்டது. அங்கிருந்த மணமகன் மற்றும் மணமகளின் உறவினர்கள், ஒன்றாக அமர்ந்து விருந்தை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களிடம் தாங்கள் யார்? என்று கேட்டனர். அதற்கு அவர்கள் பதில் சொல்ல முடியாமல் முழித்தனர். அதிர்ச்சியடைந்த உறவினர்கள், ‘திருமண மண்டபத்தில் ஓசி விருந்து சாப்பிட வந்தீர்களா?’ எனக்கூறி தாக்கினர். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, திடீரென சிலர் தாக்கியதால் அங்கிருந்து ஜாவேத் குரேஷி உள்ளிட்டோர் தப்பியோடினர். திருமண மண்டபத்தின் வெளியே நின்றிருந்த சிலர், ஓட்டம் பிடித்தவர்களை திருடர்கள் என நினைத்து அவர்களும் சரமாரியாக தாக்கினர்.

என்ன செய்வதென்றே தெரியாமல் ஆளை விட்டால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட அவர்கள், தாங்கள் ஓட்டிவந்த இருசக்கர வானங்களை திருமண மண்டபத்திலேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனர். தகவலறிந்த ஓஷிவாரா போலீசார், அவர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது திருட்டு வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமண மண்டபத்தில் ஓசி விருந்து சாப்பிட வந்தவர்களை விரட்டியடித்த சம்பவம், மகாராஷ்டிராவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

The post ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருந்த நேரத்தில் ‘ஓசி’ விருந்து சாப்பிட போய் தர்மஅடி வாங்கிய கும்பல்: திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் appeared first on Dinakaran.

Tags : Dharmaadi ,Mumbai ,Maharashtra ,
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...