×

புளியந்தோப்பில் பூட்டிய வீடு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

பெரம்பூர்: புளியந்தோப்பில் பூட்டிவிட்டுச் சென்ற ஆட்டோ ஓட்டுனர் வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை புளியந்தோப்பு கே.பி பார்க் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பின் 8வது மாடியில் வசித்து வருபவர் முருகன் (60). இவரது மனைவி கற்பகம் (55). இவர்களுக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். முருகன் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

நேற்று மதியம் 1 மணியளவில் தனது மனைவி கற்பகத்தை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு முருகன் சென்றிருந்தார். அப்போது அவரது வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் முருகனுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பேசின் பிரிட்ஜ் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசார் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து வியாசர்பாடி மற்றும் வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முருகனின் வீட்டின் பூட்டை உடைத்து தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டில் இருந்த 2 டிவி, மெத்தைகள், துணிகள் உள்ளிட்ட பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமாகின. மின்கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசாரின் முதற்கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.

The post புளியந்தோப்பில் பூட்டிய வீடு தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Pulianthop ,Perambur ,Pulyanthop ,Chennai ,Dinakaran ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு